அதிமுக, மதிமுக உறுப்பினர்களால் சட்டசபையில் அமளி
சென்னை: ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கோரி அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்ததால், அமளி ஏற்பட்டது.
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பிரச்சனையை எழுப்ப முயன்றார்.
அப்போது, சபாநாயகர் ஆவுடையப்பன் குறுக்கிட்டு இந்த பிரச்சனை தொடர்பாக இன்று காலையில் தான் எனது கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். அது எனது ஆய்வில் உள்ளது. விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தகுதி இருந்தால் எடுக்கப்படும் என்று கூறினார்.
உடனே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சல் எழுப்பினர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்களை பார்த்து, நீங்கள் சொல்வதற்காக அதை எடுக்க முடியாது. இன்று காலை 9.08 மணிக்கு தான் என்னிடத்தில் கொடுத்து இருக்கிறீர்கள். எனவே அதனை பரிசீலனை செய்து நாளை முடிவு சொல்கிறேன் என்று கூறினார்.
ஆனால் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து பேசியதால் கூச்சல்குழப்பம் தொடர்ந்தது. மதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.
அப்போது சபாநாயகர், மதிமுக உறுப்பினர் சதன் திருமலைகுமாரும் இதுகுறித்து என்னிடம் கொடுத்து இருக்கிறார். ஆனால் அதற்கான அடிப்படை ஆவணம் அதில் இல்லை. இதுதொடர்பாக வழக்கு ஏதேனும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் அதை எடுக்க முடியாது.
எனவே, நீதிமன்ற தீர்ப்பு நகல் எனக்கு வேண்டும். அதை நாளை கொண்டு வந்தால் அதனை பார்த்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
ஆனால், அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவை முன்னவர் அன்பழகன் எழுந்து, இங்கு எழுப்பப்பட்ட பிரச்சனை குறித்து பதிலளிக்கும் நிலையில் அரசு இப்போது இல்லை. முதல்வரோ, சட்ட அமைச்சரோ இதற்கு பதிலளிக்க வேண்டும். இன்று அவர்கள் அவையில் இல்லாததால் இதனை நாளை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
இதையடுத்து சபாநாயகர் கூறும் போது, நாளை எடுத்துக் கொள்ளலாம் என்று அவை முன்னவர் தெரிவித்து இருப்பதால் நாளை இதனை அனுமதிப்போம். அதற்கு முன்பாக எனக்கு நீதிமன்ற தீர்ப்பு நகல் வந்து விட வேண்டும் என்று கூறினார். பின்னர் உறுப்பினர்கள் அமைதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications