ரூ 120 கோடி செலவில் விழுப்புரம் - வேலூர் ரயில் பாதை மின்மயம் !
விழுப்புரம்: விழுப்புரம் - வேலூர் இடையே ரூ 120 கோடி மதிப்பில் ரயில் பாதை மின் மயமாக்கப்பட உள்ளது. இப் பணிகள் விரைவில் தொடங்கி 2 ஆண்டுகளில் முடிந்துவிடும் என்று ரயில்வே முதன்மை நிர்வாக அலுவலர் ராமநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.
விழுப்புரம் - காட்பாடி இடையே ரூ 500 கோடி மதிப்பில் 160 கி.மீ தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2007 ஜூன் மாதம் தொடங்கியது.
இதன் முதல் கட்டமாக, காட்பாடி - வேலூர் இடையே 10 கி.மீ தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது, ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்டமாக விழுப்புரம் - வேலூர் இடையே 150 கி.மீ தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ்.நாயுடு ஆய்வு செய்தார்.
பணிகள் முழுமையாக முடியாததால் விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு கடந்த மாதம் முதல் தேதி இயக்கப்பட இருந்த அதிவேக சோதனை ஓட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதன் பின்பு, இப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இப் பணிகளை முதன்மை நிர்வாக அலுவலர் ராமநாதன் சிறப்பு ரயில் மூலம் விழுப்புரத்தில் இருந்து வேலூர் வரை சென்று ஆய்வு செய்தார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விழுப்புரம் - வேலூர் இடையே ரூ 120 கோடி மதிப்பில் ரயில் பாதை மின் மயமாக்கப்பட உள்ளது. இப் பணிகள் விரைவில் தொடங்கி 2 ஆண்டுகளில் முடிந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.