தமிழக சட்டமேலவை-மக்களவையில் விவாதம்
டெல்லி: தமிழக சட்ட மேலவைக்கான மசோதா நேற்று மாலை ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இன்று இந்த மசோதா தொடர்பாக மக்களவையில் விவாதம் நடந்து வருகிறது.
தமிழகத்தில் இயங்கி வந்த சட்ட மேலவை கடந்த 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபோது இரண்டுமுறை மேலவையை அமைக்க முயற்சித்தது. இருப்பினும் அது முடியவில்லை. பின்னர் வந்த அதிமுக அரசு இது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்து விட்டதால், மேலவைக்கு உயிர்கொடுக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
இந்தநிலையில் தற்போதைய திமுக அரசு மீண்டும் மேலவையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. இதுதொடர்பாக கடந்த மாதம் 12ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நேற்று முன்தினம் மாலை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து ஒப்புதல் தரப்பட்டது.
இதையடுத்து நேற்று ராஜ்யசபாவில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மசோதாவை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்ட மலேவை மசோதா-2010 என்ற பெயரிலான அந்த மசோதாவை தாக்கல் செய்த வீரப்ப மொய்லி, 78 உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த மேலவை அமையும்.
கடந்த 1986ம் ஆண்டு தமிழகத்தில் மேலவை கலைக்கப்பட்டது. இருப்பினும் 2010, ஏப்ரல் 12ம் தேதி மேலவையை மீண்டும் உருவாக்குவது தொடர்பான தீர்மானத்தை தமிழக சட்டசபை நிறைவேற்றியது என்றார்.
மசோதாவை வீரப்ப மொய்லி தாக்கல் செய்து பேசியபோது அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் எழுந்து, இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. இதை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சட்ட மேலவை இல்லாமலேயே தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பல வளர்ச்சித் திட்டங்களை சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளது என்றார் மைத்ரேயன். இருப்பினும் மொய்லி எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மசோதாவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் மசோதா மீதான விவாதம் தொடங்கியது. அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன், பாஜக சார்பில் வெங்கையா நாயுடு, பிரகாஷ் ஜாவதேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் டி.க.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, காங்கிரஸ் சார்பில் ஜெயந்தி நடராஜன், ஞானதேசிகன், சுதர்சன நாச்சியப்பன், திமுக சார்பில் திருச்சி சிவா ஆகியோர் பேசினர்.
அதிமுக மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர். பாஜக உள்ளிட்ட மற்ற கட்சியினர் ஆதரித்துப் பேசினர்.
மைத்ரேயன் பேசுகையில், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் இந்த மசோதாவை ரத்து செய்வோம் என்றார்.
பின்னர் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந் நிலையில் இன்று லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வருகிறது.
விவாதத்துக்குப் பின் ஓட்டெடுப்பு நடத்தப்படும். இங்கும் மசோதா நிறைவேறியவுடன் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின் மேலவை அமைக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கும்.












Click it and Unblock the Notifications