ஜார்கண்ட் முதல்வர் பதவி-பாஜகவில் கடு்ம் மோதல்!

மக்களவையில் சமீபத்தில் நடந்த ஒட்டெடுப்பில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக சிபுசோரன் ஓட்டு போட்டதால் கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்தது. இதனால முதல்வர் சிபுசோரன் ஆட்சியை இழக்கும் நிலை உருவானது.
இதையடுத்து சிபு சோரனின் மகன் ஹேமந்த் பாஜவிடம் மன்னிப்பு கேட்டு சரணடைந்தார். இரு கட்சிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் சிபுசோரன் பதவி விலகுவது அதற்கு பதிலாக பாஜக தலைமையில் ஆட்சி அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், பாஜகவில் முதல்வரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா, தற்போதைய துணை முதல்வர் ரகுவர்தாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா ஆகியோர் உள்ளனர்.
இதில் யஷ்வந்த் சின்காவுக்கே கட்சி மேலிடத்தில் அதிக ஆதரவு உள்ளது. ஆனால் எம்எல்ஏக்கள் மத்தியில் அர்ஜுன் முண்டாவுக்கு அதிக ஆதரவு உள்ளது.
பழங்குடி இனத்தை சேர்ந்தவரே முதல்வராக வேண்டும்:
2000ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்தே பழங்குடியினத்தைச் சேர்ந்தவரே முதல்வராக இருந்து வந்துள்ளனர். இந்த மாநிலத்தில் 32 சதவீத மக்கள் பழங்குடியினர் ஆவர்.
எனவே தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று பழங்குடி சமூக எம்.எல்.ஏக்கள் வற்புறுத்தி வருகின்றனர். பாஜகவின் 18 எம்.எல்.ஏக்களில் 9 பேர் இந்த சமூகத்தினர் ஆவர். அவர்கள் அனைவரும் அர்ஜுன் முண்டாவையே ஆதரிக்கின்றனர்.
ஆனால், யஷ்வந்த் சின்கா பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவர். இவருக்கு பாஜக மேலிடத்தில் ஆதரவு இருந்தாலும் எம்எல்ஏக்களிடம் ஆதரவு இல்லை. இதனால் முதல்வர் தேர்வில் சிக்கல் நீடிக்கிறது.
நாளை எம்எல்ஏக்கள் கூட்டம்:
இந் நிலையில் ஜார்க்கண்ட் முதல்வராக யாரை நியமிப்பது என்பது குறித்து விவாதிக்க பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு பின் பேசிய பாஜக பொதுச் செயலாளர் அனந்த்குமார், முதல்வர் யார் என்பதை தீர்மானிக்க நாளை ராஞ்சியில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றார்.
நிதிஷ் குமாருக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு:
இதற்கிடையே பிகாரில் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அவரது ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
ஏற்கனவே நிதிஷ்குமாருக்கும் கட்சியின் தலைவர் சரத் யாதவுக்கும் ஏழாம் பொருத்தம். இந் நிலையில் நிதிஷுக்கு எதிராக கட்சியின் இரு மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
பிகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் ஆட்சியைப் பிடித்தார். இதன் மூலம் 10 ஆண்டுகளாக எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளாமல் பிகாரை ஒழித்துக் கட்டிய லாலு பிரசாத் யாதவின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
இந்தக் கூட்டணி ஆட்சி பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இந் நிலையில் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பும் அதிகமாகியுள்ளது.
பாட்னாவில் நடந்த விவசாயிகள் மகாபஞ்சாயத்து மாநாட்டில் பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களான பிரபுநாத் சிங், ராஜீவ்ரஞ்சன் சிங் ஆகியோர் முதல்வர் நிதிஷ்குமாரை மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
அவர்கள் பேசுகையில், நிதிஷ்குமார் அரசு பாஜகவுடன் சேர்ந்து கொண்டு பந்தோபாத்யாயா கமிஷன் அறிக்கையை அமலாக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் நிலங்களை முதலாளிகள் ஆக்கிரமிக்கவுள்ளனர்.
இதைச் செய்தால் நிதிஷ் அரசை நாங்களே கவிழ்ப்போம். மாநிலத்தில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது போல நாடாகமாடி வருகிறார் நிதிஷ். ஆனால், பிகார் முன்பு எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்போதும் உள்ளது.
இப்போது விவசாயிகளுக்கு எதிராகக் கிளம்பியுள்ளர். இந்த கமிஷன் பரிந்துரையை அமலாக்கப்பட்டால் விவசாயிகள் கையில் ஆயுதங்களை ஏந்துவார்கள. நிலத்தை ஆக்கிரமிப்பவர்களை ஒழித்துக் கட்டுவார்கள் என்றனர்.












Click it and Unblock the Notifications