இங்கிலாந்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல்!

இங்கிலாந்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 306 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.
ஆட்சியில் உள்ள பிரதமர் கோர்டன் பிரவுனின் தொழிலாளர் கட்சி 258 இடங்களிலும் லிபரல் ஜனநாயகக் கட்சி 58 இடங்களிலும் வென்றுள்ளன.
ஆட்சியமைக்க 326 எம்பிக்கள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவி்ல்லை.
இதனால் கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் ஜனநாயக கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயன்று வருகின்றன.
இது தொடர்பாக பேச்சு நடத்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் கேமரோன் மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் நிக் கிளெக் ஆகியோர் இரு குழுக்களை அமைத்துள்ளனர். இந்தக் குழுவினர் மாராதான் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகினறனர்.
இந்தக் குழுவினர் நேற்று முன்தினமும் நேற்றும் இன்றும் பேச்சு நடத்தியும ஆட்சி அமைப்பது குறித்து உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து கேமரோனும், நிக் கிளெக்கும் தொலைபேசியிலேயே ஒன்றரை மணி நேரம் பேசினர்.
இந் நிலையில் லிபரல் ஜனநாயக கட்சியை வளைத்து ஆட்சியில் தொடர பிரதமர் கார்டன் பிரவுனின் தொழிலாளர் கட்சியும் ஈடுபட்டுள்ளது.
6 முக்கிய இலாகாக்கள் தந்து அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதாக பிரதமர் பிரவுன் லிபரல் ஜனநாயக கட்சியினரிடம் கூறி வருகிறார். மேலும் லிபரல் ஜனநாடகக் கட்சியின் சில முக்கிய பொருளாதார சீர்திருத்த கொள்கைகளையும் செயல்படுத்தவும் தயார் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே தற்போது எம்.பிக்களை விலைக்கு வாங்க வளைக்க கன்டர்வேடிவ் கட்சியும் போட்டா போட்டி போட ஆரம்பித்துள்ளதால் இங்கிலாந்து அரசியல் பெரும் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications