பெரியாறு அணையை உடைக்க 12,000 கிலோ வெடிமருந்தை தயார் செய்துள்ளது கேரளா- வைகோ

தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக போராட பொதுமக்களை திரட்டும் பணியில் நெல்லை மாவட்டத்தில் நேற்று மதிமுக பொது செயலாளர் வைகோ கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மானுரில் நடந்த பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில்,
முல்லை பெரியாறு பிரச்சனைக்காக நாம் சில ஆண்டுகளாக போராடி வருகிறோம். தமிழகத்தின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். அதற்கான நதிகளை தேசியமயமாக்க கோரி நான் 1200 கிமீ நடை பயணம் மேற்கொள்வேன். 2006ம் ஆண்டிலேயே முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. ஆனால் அந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் கேரள அரசு சட்டசபையை கூட்டி அணை தங்களுக்குதான் உரிமையுள்ளதாக கூறி வருகிறது.
முல்லை பெரியாறு அணையின் அடிமட்ட அகலம் தற்போது 200 அடியாகவும், 6 அங்குலமாகவும் உள்ளது. அந்த அணையில் கலுங்கு, மதகுகள் இல்லை. 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய பஞ்சத்தை போக்க இந்த அணையை பொன்னி குயிக் கட்டினார். பெருமைமிக்க அந்த அணையை தற்போது உடைக்க கேரள அரசு முயற்சி செய்து வருகிறது.
இதற்காக 12 ஆயிரம் கிலோ வெடி மருந்தை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தை சேர்ந்த 89 ஆயிரம் ஏக்கர் இரு போக விளைநிலங்கள் பாதிக்கப்படும். முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் தமிழகத்தை சேர்ந்த 5 மாவட்டங்கள் அழிந்து போகும். எனவே நம்முடைய எதிர்ப்பை நாம் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே வரும் மே 28ம் தேதி தண்ணீருக்காக தர்ம யுத்தம் மேற்கொள்ள உள்ளோம். முல்லை பெரியாறு மட்டுமின்றி நெய்யாறு, இடதுகரை சானல் என நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரள அரசை கண்டித்து சாலை மறியல் நடத்த உள்ளோம்.
இப்போராட்டம் செங்கோட்டை, களியாக்கவிளை உள்ளிட்ட 13 தமிழக-கேரள எல்லையோர சாலைகளில் நடக்கும். நெல்லை மாவட்ட மக்கள் செங்கோட்டையில் நடக்கும் சாலை மறியலில் கலந்து கொள்ள வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications