கல்வி கட்டணம்: தனியார் பள்ளிகள் மிரட்டலுக்கு அரசு பணியாது-அமைச்சர் தென்னரசு
சென்னை: கல்விக் கட்டண விஷயத்தி்ல் தனியார் பள்ளிகளின் மிரட்டலுக்கு அரசு பணியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டசபையில் இன்று பாமக உறுப்பினர் வேல்முருகன், பேசுகையில் தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் அமலாக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் சில தனியார் பள்ளி நிர்வாகிகள் இந்த கட்டணம் போதாது என்றும், ஜூன் மாதம் பள்ளிகளை திறக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். அரசின் உத்தரவை மதிக்காத இந்தப் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,
தனியார் பள்ளிகளுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு நிர்ணயம் செய்துள்ளது.
10,000க்கும் மேற்பட்ட இந்தப் பள்ளிகள் அனைத்திலும் பள்ளிகளை நடத்த ஆகும் செலவு, அந்த பள்ளியில் உள்ள வசதிகள், எவ்வளவு கட்டணம் வாங்கலாம் என்ற அவர்களது கருத்து எல்லாவற்றையும் கேட்டு அறிந்த பிறகே ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நீதிமன்றமும் எற்றுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு சாதாரண ஏழை, எளிய மக்களிடம் பாராட்டும் வரவேற்பும் கிடைத்துள்ளது. எந்தப் பள்ளியாவது கட்டணம் குறைவாக உள்ளது என்று கருதினால் சம்பந்தப்பட்ட குழுவிடம் முறையீடு செய்யலாம். அது பரிசீலிக்கப்படும். அதை விடுத்து மிரட்டல் விடுத்தால் அதற்கு இந்த அரசு பணியாது என்றார்.












Click it and Unblock the Notifications