நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக 135 பேர் புகார் மனு
பெங்களூர் : சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக 135 பேர் புகார் மனு அளித்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
நித்தியானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனு நேற்று பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் நடராஜ் நீதிபதியிடம் வாதிடுகையில், நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் உள்பட 135 பேர் நித்தியானந்தாவுக்கு எதிராக புகார் அளித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், நித்தியானந்தாவிற்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணையில் இடையூறு ஏற்படும். எனவே வழக்கின் தன்மையை கருதி நித்தியானந்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.
விசாரணைக்குப் பின்னர் வழக்கை மே 18ம்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கணக்கு முடக்கம்- புது மனு தாக்கல் செய்ய அனுமதி
இதற்கிடையே, தனது வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ளதை எதிர்த்து நித்தியானந்தா புதிய மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்துள்ளது.
நித்தியானந்தா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அங்கயர்கண்ணி என்ற வழக்கறிஞர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்தனர்.
அதில் ஒரு பகுதியாக பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் உள்ள வங்கி கணக்குகளை முடக்க குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து பெங்களூரில் உள்ள 6 ஐசிஐசிஐ வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
இதை நீக்கக்கோரி நித்தியானந்தா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வெங்கட்ராமன் முன் விசாரணைக்கு வந்தபோது, அவரது வழக்கறிஞர்கள் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், புதிய மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் வலியுறுத்தினர்.
இதைக்கேட்ட நீதிபதி தற்போதைய மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு, புதிய மனுவை தாக்கல் செய்ய அனுமதி அளித்தார்.












Click it and Unblock the Notifications