77 வயதில் பிளஸ்டூ பாஸ் செய்த ஓய்வு பெற்ற அதிகாரி
மதுரை: பத்தாவது முடித்து விட்டு தமிழக அரசில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற அதிகாரி, தனது 77வது வயதில் பிளஸ்டூ தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மதுரையை சேர்ந்தவர் வீரமுத்து. தற்போது 77 வயதாகிறது. எஸ்.எஸ்.எல்.சி. படித்து இளநிலை உதவியாளராக அரசு பணியில் சேர்ந்தவர். பதவி உயர்வு மூலம் கூட்டுறவு துணை பதிவாளராகி ஓய்வு பெற்ற அவருக்கு கல்வியில் இருந்த தாகம் தணியவில்லை.
இளமைக்காலத்தில் படிக்க முடியாத குறையை போக்குவதற்காக, ஓய்வு பெற்றபின் படித்து பட்டதாரியாக விரும்பினார். கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு எழுதிய அவர், 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் (1200-க்கு 742) பெற்று தேர்ச்சி பெற்றார். அடுத்து பி.ஏ. (யோகா), எம்.ஏ. பட்டம் பெறப் போவதாக அறிவித்த வீரமுத்து, பிளஸ்-2வில் 1000-க்கு மேல் மதிப்பெண்களை எதிர்பார்த்ததாக கூறினார்.
தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு, நெருங்கிய நண்பர் ஒருவரின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியினால் படிப்பில் தன்னால் முழுக்கவனம் செலுத்த முடியவில்லை என்றும் வீரமுத்து கூறினார்.
படிப்புத் தாகம் குறையாமல் இந்த வயதிலும் பிளஸ்டூ படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள வீரமுத்துவின் 2 மகன்களும் டாக்டர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications