காலாவதி உணவு பதுக்கல் வழக்கில் முக்கியப் புள்ளி துரைப்பாண்டி சரண்
சென்னை: சென்னை ராயபுரம் கிட்டங்கியில் காலாவதியான உணவுப் பொருளை பதுக்கி வைத்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியப் புள்ளியான துரைப்பாண்டி இன்று சென்னை கோர்ட்டில் சரணடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் சென்னை ராயபுரத்தில் உள்ள தனக்குச் சொந்தமான குடோனில் காலாவதி உணவுப் பொருட்களை பதுக்கினார் என்றும், சூப்பர் மார்க்கெட்டுகளில் அந்த பொருட்களை சப்ளை செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது.
இதனையடுத்து துரைப்பாண்டியின் குடோனுக்கு சீல் வைத்த அரசு அதிகாரிகள், ராயபுரம் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துரைப்பாண்டி தனது குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார்.
துரைப்பாண்டியின் மோசடிச் செயல்கள் அம்பலமானதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் போலீஸார் காலாவதி உணவை கண்டுபிடிக்கும் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் துரைப்பாண்டி மும்பையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததும், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை விரைந்தனர்.
ஆனால் இன்று சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் துரைப்பாண்டி சரணடைந்துள்ளார். அவரை காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications