ரிலையன்ஸ், மோர் நிறுவன கடைகளில் காலாவதி உணவுப் பொருள் விற்பனை அம்பலம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் சென்னை ராயுபரத்தில் வசித்து வருகிறார். அங்கு கொடவுன்களை வைத்து பாக்கெட்களில் விற்பனையாகும் உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
சமீபத்தில் துரைப்பாண்டியன் கொடவுன் ஒன்றில் நடந்த விசாரணையில் காலாவதி உணவுப் பொருட்கள் பெருமளவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து துரைப்பாண்டி தலைமறைவானார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் அவர் சரணடைந்தார்.
அவரை தற்போது போலீஸார் காவலில் எடுத்து வைத்து 3 நாட்களாக விசாரித்து வருகின்றனர்.
3வது நாளாக நடந்தவிசாரணையில், பல்வேறு பரபரப்பான தகவல்களைக் கொடுத்துள்ளார் துரைப்பாண்டி.
சென்னையில் பிரபலமாக உள்ள ரிலையன்ஸ் மற்றும் மோர் நிறுவன கடைகளிலிருந்துதான் தான் காலாவதியான உணவுப் பொருட்களை வாங்கி விற்று வந்ததாக கூறியுள்ளார் துரைப்பாண்டி. கடந்த ஒரு வருடமாக இவ்வாறு செய்து வந்ததாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரிலையன்ஸ் மற்றும் மோர் நிறுவன கடைகளில் ரெய்டு நடத்தவும், அவற்றின் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தவும் ராயபுரம் போலீஸார் தீர்மானித்துள்ளனர்.மேலும் இவர்களின் வங்கிக் கணக்குளை பரிசோதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
சோதனையை எதிர்த்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே, காலாவதியான உணவுப் பொருட்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் நடத்தும் சோதனையைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை மெமோரியல் ஹால் அருகே தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை யின் த.வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காலாவதி உணவு பொருள் சோதனையில் அதிகாரிகளின் அத்துமீறல் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்க மாநில தலைவர் த.வெள்ளையன் பேசுகையில்,
தமிழ்நாடு முழுவதும் மளிகை மற்றும் உணவுப் பொருள்களை வியாபாரம் செய்துவரும் கடைகளில் காலாவதி பொருட்களை கைப்பற்றுகிறோம் என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறி செயல்படுகின்றனர். வணிகர்களை சமூக விரோதிகள் போல் பாவித்து பொய் வழக்கு போடுகின்றனர். காலாவதி பொருட்களை விற்பதாக கூறி கடையில் உள்ள வெல்லம், புளி, பருப்பு போன்றவற்றை கைப்பற்றுகின்றனர்.
தரமான பொருட்களை வணிகர்கள் பிளாஷ்டிக் கவர்களில் சுத்தமாக, சுகாதாரமாக பொட்டலம் செய்து வைத்து இருப்பதை கூட கைப்பற்றுகின்றனர். இந்த அத்துமீறிய செயல் சில்லரை வியாபாரிகளின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என்றே கருதுகிறோம்.
எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உடனடியாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications