எனக்கு 48, ராப்ரிக்கு 55 - சென்சஸ் கணக்கெடுப்பாளர்களிடம் லாலு நக்கல்!
பாட்னா: எனக்கு 48, எனது மனைவிக்கு 55 என்று கூறி மக்கள் தொகை கணக்கெடுக்க வந்தவர்களை கலாய்த்து அனுப்பியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியின் ஒரு கட்டமாக பாட்னாவில் லாலு பிரசாத் யாதவின் வீட்டுக்கு மாநில சென்சஸ் திட்ட இயக்குநர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
அப்போது குடும்பத்தினர் குறித்து விவரம் கேட்ட அதிகாரிகளிடம்தான் மேற்கண்டவாறு கூறினார் லாலு. இதைக் கேட்டு அதிகாரிகளுக்குக் குழப்பம். அப்படியானால் உங்கள் மனைவி உங்களை விட மூத்தவரா என்று கேட்டுள்ளனர். அதற்கு லாலு, இருக்கலாம் என்று கூறி மேலும் குழப்பத்தைக் கூட்டியுள்ளார்.
இதற்கு மேலும் அவர்களை டென்ஷனாக்க வேண்டாம் என்று முடிவு செய்த லாலு, அவர்களிடம், நான் சொன்னது வயது அல்ல, நானும், எனது மனைவியும் பிறந்த வருடத்தை. நான் பிறந்தது 1948ல், ராப்ரி பிறந்தது 1955ல் என்று கூறி அந்த இடத்தையே கலகலப்பாக்கினார்.
பின்னர் கூடியிருந்த செய்தியாளர்களிடம் திரும்பிய லாலு, முதல் கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஜூன்-ஜூலையில் முடிவடைகிறது. அதன் பிறகு ஜாதி வாரியான கணக்கெடுப்பு தொடங்கும் என நம்புகிறேன் என்றார்.