போட்டி கட்சியினர் தாக்கி கூர்க்கா தலைவர் தமாங் கொலை: டார்ஜிலிங்கில் கலவரம்
சிலிகுரி: கூர்க்காலாந்து தனி மாநிலம் கேட்டு போராடி வந்த மேற்கு வங்க மாநில அகில இந்திய கூர்க்கா லீக் கட்சியின் தலைவர் மதன் தமாங் போட்டிக் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் டார்ஜிலிங் மலைப் பகுதி முழுவதும் பெரும் கலவரம் வெடித்து பதற்றம் நிலவுகிறது.
மதன் தமாங் கட்சியின் மாநாடு இன்று மாலை டார்ஜிலிங் நகரில் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட இன்று காலை மதன் தமாங் சென்றார்.
கட்சி மூத்த நிர்வாகிகளும் அவருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் மதன் தமாங்கை வீச்சரிவாளால் கழுத்திலும் வயிற்றிலும் வெட்டினர்.
இதில் மதன் தமாங் படுகாயமடைந்து மயங்கினார். தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே இறந்தார்.
மதன் தமாங்கின் அகில இந்திய கூர்க்கா லீக் கட்சிக்கு எதிராக கூர்க்கா ஜனமோர்ச்சா என்ற கட்சி செயல்பட்டு வந்தது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடப்பதுண்டு.
எனவே கூர்க்கா ஜனமோர்ச்சா கட்சியை சேர்ந்தவர்கள்தான் மதான் தமாங்கை கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
மதன் தமாங் கொல்லப்பட்டது அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் கூர்க்கா ஜனமோர்ச்சா கட்சியினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனால் டார்ஜிலிங் பகுதி முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.
கடைகள் அடைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
டார்ஜிலிங்கில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டதையடுத்து அவர்களைக் கலைக்க போலீசார் 4 முறை துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
மதன் தமாங்கின் அகில இந்திய கூர்க்கா லீக் கட்சி, எதிர்க்கட்சியான கூர்க்கா ஜன மோர்ச்சா இரு கட்சிகளுமே கூர்க்காலாந்து தனி மாநிலம் கேட்டு போராடி வருவவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கூர்க்கா ஜனமோர்ச்சா கட்சி சமீபத்தில் மேற்குவங்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி டார்ஜிலிங்கில் இடைக்கால கவுன்சில் ஒன்றை அமைக்க முடிவு செய்தது.
இதற்கு மதன் தமாங் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தோடு இதை விளக்கி பேசவே இன்று மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இந்த மாநாட்டுக்கு கூர்க்கா ஜனமோர்ச்சா கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
முதலில் மாநாடு டார்ஜிலிங்கில் உள்ள சவ்ராஸ்டா என்ற இடத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால், கூர்க்கா ஜன மோர்ச்சா கட்சியினரின் கடும் எதிர்ப்பால் மாநாடு பிளாண்டர்ஸ் என்ற பகுதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தான் இந்தப் படுகொலை நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications