அஜ்மல் கசாப் இனி கைதி எண் சி-7096
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இனிமேல் அந்த எண்ணைக் கொண்டுதான் கசாப் அழைக்கப்படுவான்.
தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கசாப்புக்கு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. கசாப்பின் எண் கைதி எண் சி-7096 ஆகும். இனிமேல் இந்த எண்ணின் பெயரில்தான் கசாப் அழைக்கப்படுவான்.
கொலைக் குற்றங்களில் ஈடுபட்டுள்ள கைதிகள் ஆர்தர் சாலை சிறைச்சாலையின் சி பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே பகுதியில் கசாப்பும் அடைக்கப்பட்டுள்ளால் அவனது எண்ணுடன் சி என்ற பிளாக் எழுத்தின் பெயரையும் சேர்த்து எண் கொடுத்துள்ளனர்.
3 மாதம் வரையிலான தண்டனை பெற்ற கைதிகள் ஏ பிரிவாகவும், ஐந்து ஆண்டு வரை தண்டனை பெற்றவர்கள் பி பிரிவாகவும் கருதப்படுவர்.
கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவனுக்கு சிறையில் வேலை எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மர வேலை உள்ளிட்ட சில வேலைகள் தரப்படும். அதற்கு ஊதியமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மரண தண்டனை கைதிகளுக்கு வேலை தரப்பட மாட்டாது.
தற்போதைக்கு கசாப்புக்கு உள்ள ஒரே வேலை அவனது உடைகளை அவனே துவைத்துக் கொள்வதுதான். காரணம், லாண்டரிக்குப் போட அவனிடம் பணம் இல்லாததால், அவனே அவனது துணிகளை துவைத்துக் கொள்ள வேண்டும்.
22 வயதான கசாப், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு சிறையில் தனிமையாக உணர்கிறானாம். தனது அறையின் மூலையிலேயே எப்போதும் அமர்ந்திருக்கிறானாம்.
தன்னை யாராவது வந்து பார்க்க மாட்டார்களா, உறவினர்கள் வர மாட்டார்களா என தவிப்புடன் உள்ளானாம். சிறைக் காவலர்களிடம் இதுகுறித்து அடிக்கடி கேட்டபடி உள்ளானாம்.
காலையில் 7 மணிக்கு எழுந்திருக்கும் கசாப், புத்தங்கள் மற்றும் திருக்குரான் போன்றவற்றை வாசிக்கிறான். தினசரி ஐந்து முறை தவறாமல் தொழுகையும் நடத்துகிறான்.
இதற்கிடையே, கசாப்புக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உறுதி செய்வதற்கு வசதியாக மும்பை தனி கோர்ட் வழங்கிய தீர்ப்பு நகலை, அனைத்து ஆவணங்களுடன் பாம்பே உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றனவாம்.
மும்பை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட மற்ற இருவரான பஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது ஆகியோர் தொடர்நது ஆர்தர் சாலை சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உ.பியில் வேறு வழக்குகள் உள்ளதால், விரைவில் இந்த இருவரையும் உ.பி. போலீஸாரிடம் மும்பை போலீஸார் ஒப்படைக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications