கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த 3வது பெரிய விமான விபத்து
மங்களூர்: மங்களூரில் நேற்று நடந்த கோர விமான விபத்து, கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த 3வது பெரிய விமான விபத்தாகும்.
கடந்த 1996ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் நடுவானில் சவூதி அரேபிய விமானமும், கஜகஸ்தான் நாட்டு விமானமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு அதில் பயணம் செய்த 349 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதான் கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிகப் பெரிய விமான விபத்தாகும்.
1978ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று 213 பேருடன் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 213 பேரும் உயிரிழந்தனர்.
நேற்று மங்களூரில் நடந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர். இது இந்தியாவின் 3வது பெரிய விமான விபத்தாகும்.
கர்நாடகத்தில் 2வது விபத்து
நேற்று மங்களூரில் நடந்த விமான விபத்து கர்நாடகத்தில் நடந்த 2வது விமான விபத்தாகும். அதேசமயம், மிகப் பெரிய விபத்தாகவும் அமைந்துள்ளது.
இதற்கு முன்பு 1990ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பெங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. அதில், 92 பேர் உயிரிழந்தனர். 54 பேர் உயிர் தப்பினார்கள். இந்த விபத்தும், விமானம் தரையிறங்கிய சமயத்தில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நடந்த பிற விமான விபத்துக்கள் ..
1988ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 124 பேர் கொல்லப்பட்டனர்.
1962ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி சிட்னியிலிருந்து மும்பை வந்த அலிடாலியா நிறுவன விமானம் மலையில் மோதியதில் 94 பேர் உயிரிழந்தனர்.
1991ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி இம்பால் நகரில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 69 பேர் இறந்தனர்.
2000மாவது ஆண்டு ஜூலை 17ம் தேதி அலையன்ஸ் நிறுவன விமானம் பாட்னா விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1993ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி அவுரங்காபாத் விமான நிலையத்தில்நடந்த விபத்தில் 55 பேர் உயிரிழந்தனர்.
1982ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி மும்பை விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
13 ஆண்டுகளில் 400 விபத்துக்கள் - 6000 பேர் பலி
சமீப காலமாக உலகம் முழுவதும் விமானவிபத்துக்கள் பெருகி வருகின்றன. கடந்த 13 ஆண்டுகளில் மட்டும் 400 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் மொத்தமாக கிட்டத்தட்ட 6000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போயிங் நிறுவன புள்ளி விவரத் தகவல் கூறுகிறது.
1-6-2009-ல் அட்லாண்டிக் பெருங்கடலில் பாரீஸ் சென்ற ஏர் பிரான்ஸ் விமானம் விழுந்தது. இதில் 228 பேர் இறந்தனர்.
30-6-2009-ல் இந்திய பெருங்கடலில் உள்ள காமோரோஸ் தீவு அருகே ஏமன் நாட்டு விமானம் விழுந்தது. இதில் 153 பேர் உயிர் இழந்தனர். ஒருவர் மட்டும் தப்பினார்.
15-7-2009-ல் ஈரான் நாட்டில் நடந்த விமான விபத்தில் 168 பேர் பலி. அதேபோல, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நொறுங்கி விழுந்தது. இதில் 172 பேர் பலியானார்கள்.
2008 ஆகஸ்டு மாதம் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த விமானம் மாட்ரிட் நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது விழுந்து நொறுங்கியது. இதில் 154 பேர் இறந்தனர்.
2008-ல் கஜகஸ்தானில் நடந்த 2 விமான விபத்துக்களில் 117 பேர் மரணம். பிரேசில் நாட்டில் 2007-ல் நடந்த விமான விபத்தில் 119 பயணிகள் பலியானார்கள்.
உக்ரைன் நாட்டில் 2006-ல் நடந்த 3 விமான விபத்துக்களில் 450 பேர் கொல்லப்பட்டனரப். ரஷியாவில் 2006 ஜுலையில் நடந்த விமான விபத்தில் 170 பேர் பலி. பிரேசில் நாட்டில் நடந்த விபத்தில் 154 பேர் சாவு.
2005 ஆகஸ்டு மாதத்தில் கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் 160 பேர் இறப்பு. அதே மாதத்தில் இந்தோனேசியா நாட்டில் நடந்த விமான விபத்தில் 143 பேர் பலியானார்கள்.
2005 பிப்ரவரியில் காபூலில் மலை மீது விமானம் மோதிய விபத்தில் 104 பேர் உயிர் இறந்தனர். 2003 பிப்ரவரியில் ஈரான் நாட்டில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 275 பேர் உயிர் இழந்தனர்.
2002-ம் ஆண்டு அல்ஜீரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், மேலே எழும்பிச் செல்ல முடியாமல் எரிந்து விழுந்தது. இதில் 100 பேர் பலி. தைவான் அருகே சீன விமானம் விழுந்து நொறுங்கியதில் 225 பேர் கொல்லப்பட்டனர். தென்கொரியாவில் சீன விமானம் மலையில் மோதிய விபத்தில் 128 பேர் இறந்தனர்.
2001-ல் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஏர் பஸ் விமானம் நியூயார்க் நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது, ஓடு தளத்தில் வெடித்தது. இதில் 265 பேர் இறந்தனர். அதே ஆண்டு ஜுலை மாதம் சைபீரியா நாட்டின் காட்டு பகுதியில் விழுந்து தீப்பிடித்து 145 பேர் பலியானார்கள்.
கடந்த மாதம் மேற்கு ரஷியாவில் நடந்த விமான விபத்தில் போலந்து நாட்டின் அதிபர் உள்பட 93 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல 10 நாட்களுக்கு முன் லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் நடந்த விமான விபத்தில் 103 பேர் பலியானார்கள். இதில் 9 வயது குழந்தை மட்டும் அதிசயமாக உயிர் தப்பியது.












Click it and Unblock the Notifications