முத்துக்குமார் சிலைக்குத் தடை - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் !
தஞ்சை: தஞ்சை செங்கிப்பட்டியில் தனியார் ஒருவர் அளித்த நிலத்தில் முத்துக்குமார் சிலையைத் திறக்க போலீசார் தடை விதித்துள்ள செயலுக்கு தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்னம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்துத் தன்னையே தீயில் எரித்துக் கொண்டு உன்னதமான உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் சிலையைத் திறப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தஞ்சைக்கு அருகில் உள்ள செங்கிப்பட்டியில் தனியார் ஒருவர் அளித்த நிலத்தில் முத்துக்குமார் சிலையைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி செய்து வருகின்றது. அதற்காகக் காவல் துறையின் அனுமதியையும் பெற்றிருந்தது.
ஆனால் விழா அன்று அற்பக் காரணங்களைக் கூறி சிலையைத் திறப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் போன்ற பலவற்றில் தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சிலை வைப்பதற்கு அரசின் அனுமதி தேவையில்லை.
ஆனால் வேண்டுமென்றேத் திட்டமிட்டு முத்துக்குமார் போன்ற தியாக சீலர்களுக்கு சிலை நிறுவுவதைத் தடுக்க தமிழக அரசு முயற்சி செய்வது முத்துக்குமாரின் தியாகத்தை அவமதிப்பதாகும்.
தமிழருக்காகத் தன்னையே அர்ப்பணித்த முத்துக்குமாரின் சிலையை நிறுவுவதற்குரிய தடையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்..."
இவ்வாறு அவர் வெளி்யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications