அமைச்சரவையிலிருந்து ராசாவை திமுக விலக்க வேண்டும்-சிபிஐ
சிவகங்கை: மத்திய அமைச்சரவையில் இருந்து ராசாவை, திமுக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இக் கட்சியின் மாநில அலுவலக கட்டடத்திற்கு, நிதி வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கையில் நடந்தது. அதில் பேசிய அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்,
தொலைத் தொடர்பு துறையில் 3 ஜி அலைவரிக்கான ஏலத்தின் மூலம், ரூ.70,000 கோடி கிடைத்துள்ளது. ஆனால், 2 ஜி அலைவரிசை ஏலத்தில் ரூ. 1,650 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.
இரண்டு ஏலத் தொகையையும் ஒப்பிடும் போது, 2 ஜி ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சரவையில் இருந்து ராசாவை, திமுக விலக்கிக் கொள்ள வேண்டும். இந்த ஏலத்தை ரத்து செய்து, மறு ஏலம் நடத்த வேண்டும்.
தமிழகத்தில் மின் வெட்டு அடுத்த ஆண்டும் நீடிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு, ரூ. 93,000 கோடி கடன் உள்ளது. இந்தக் கடன் எதற்காக வாங்கப்பட்டது, செலவு விவரம், வட்டி விகிதம் ஆகியவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ராஜ்யசபா தேர்தலில், எங்கள் கட்சியின் ஆதரவை அதிமுக கோரியுள்ளது. இதுகுறித்து மத்தியக் குழு தான் முடிவு செய்யும் என்றார்.
ராசா பதவி விலக தேவையில்லை-வீரமணி:
இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையி்ல்,
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராசா பதவி விலக வேண்டி அவசியமில்லை. 3ஜி அலைவரிசையில் அரசிற்கு ரூ.36 ஆயிரம் கோடி மட்டுமே வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அரசிற்கு ரூ.66 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மேலும், பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடைபெற முடியாது. எனவே தவறுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications