ஜெ. காரை மறித்து அதிமுகவினர் போராட்டம்: மாவட்ட செயலாளரை நீக்க கோரிக்கை
சென்னை: வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரை நீக்க கோரி, அதிமுகவினர் ஜெயலலிதா வீட்டு முன் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது காரையும் மறித்தனர்.
வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள வீரமணி, கட்சி நிர்வாகிகளை அவதூறாகப் பேசுவதாகக் கூறி வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100 அதிமுக நிர்வாகிகள் போயஸ் கார்டனின் உள்ள அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீடு முன் நேற்றிரவு கூடி, முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இவர்களுக்கு அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. பாண்டுரங்கன், முன்னாள் அமைச்சர் வடிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஜெயலலிதா வீட்டு முன்பு நின்று கொண்டு அவர்கள் மாவட்ட செயலாளரை நீக்க கோரி கோஷங்களை எழுப்பினர். அப்போது ஜெயலலிதா ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வெளியே சென்றிருந்தார்.
இரவு 7.15 மணியளவில் ஜெயலலிதா போயஸ் கார்டன் திரும்பி வந்தபோது, அதிமுகவினர் அவர் கார் முன்பு நின்று கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தொண்டர்களை அமைதிப்படுத்தி ஜெயலலிதா கார் வீட்டிற்குள் செல்ல வழி ஏற்படுத்தினர்.
வீட்டிற்குள் சென்ற ஜெயலலிதா போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளை உள்ளே வருமாறு அழைத்தார்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் வடிவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் தலைமையில் மொத்தம் 6 பேர் ஜெயலலிதாவை சந்தித்தனர். அப்போது, அவர்கள் மாவட்ட செயலாளரை மாற்ற கோரி கோரிக்கை மனு கொடுத்தனர்.
மாவட்டத் தலைவரான வீரமணி கட்சி நிர்வாகிகள் யாரையும் மதிப்பதில்லை. கட்சி தொண்டர்களின் இல்ல விழாக்கள், பொது கூட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதில்லை. இப்படியே சென்றால் வேலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதியிலும் அதிமுக தோல்வியை சந்திக்க நேரிடும் என்று புகார் தெரிவித்தனர்.
முன்னதாக நேற்று காலை ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து கார் மூலம் திருப்பதி கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டுத் திரும்பினார்.












Click it and Unblock the Notifications