கடும் வெயிலுக்கு 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலி, இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்

இந்தியா முழுவதும் வெயில் வாட்டி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் வழக்கத்தை விட மிக அதிகமான வெப்பம் நிலவுகிறது.
மத்திய பிரேதச மாநிலம் மோரேனா நகரில் நேற்று 49.2 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவானது. அதாவது 120.56 பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும அனல் காற்று வீசியது.
அதே போல குவாலியர் நகரில் நிலவிய பயங்கர வெப்பம் காரணமாக அங்குள்ள முகாமில் பயிற்சியில் ஈடுபட்ட 3 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். மேலும் 11 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் குவாலியருக்கு அனுப்பப்பட்டனர்.
இவர்கள் கடும் வெயிலில் பயிற்சியில் ஈடுபட்டபோது 14 வீரர்கள் மயங்கி விழுந்தனர். இதில் கே.விநாயகம், டி.சி.கோத்தாரி ஆகிய வீரர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தவிர மூன்றாவது வீரர் ஒருவரும் பலியானார். அவரது பெயர் விவரம் தெரியவில்லை.
இவர்கள் தவிர மேலும் 11 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருந்துவிட்டு 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் குவாலியருக்கு இடம் மாறி, உடனடியாக கடும் வெயிலில் பயிற்சியில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்தது.
இந் நிலையில் மத்தியப் பிரதேசம் முழுவதும் கடும் வெப்பம் நிலவுவதால் பகல் நேரங்களில் மக்கள் அனாவசியமாக வெளியே வர வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதற்கான எச்சரிக்கை மணியும் பல பகுதிகளில் அடிக்கப்பட்டது.
இதனால் பல பகுதிகளில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் வெப்ப நிலை:
இந் நிலையில் தமிழகத்தில் நேற்று கடலூர், மதுரை,
சென்னை ஆகிய இடங்களில் 104 டிகிரி வெப்பமும், வேலூர், திருநெல்வேலியில் 103 டிகிரியும், திருச்சி, புதுச்சேரியில் 102 டிகிரியும், சேலத்தில் 100 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications