ஸ்பெக்ட்ரம் விவகாரம்: சென்னையில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்!
சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள மத்திய அமைச்சர் ராசா மீது நடவடிக்கை கோரி நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் 'முதலில் வருபவருக்கு முதலில்' என்ற தவறான கொள்கையை கடைபிடித்ததாக ஊடகங்கள், நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள், மத்திய கண்காணிப்பு ஆணையம், இந்திய கணக்குத் தணிக்கைத் தலைவர், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தொலைத் தொடர்புத்துறை ஆகியவை ராசாவின் மீது குற்றம் சுமத்தியிருக்கிறது. இருப்பினும், தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இது குறித்து ஏதாவது கருத்து தெரிவித்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சியான திமுகவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தில் விமர்சனம் செய்யாமல் மவுனம் காத்து வருகிறார் பாரதப் பிரதமர்.
எனவே, தவறான கொள்கையைக் கடைபிடித்து, ஊழலுக்குக் காரணமான ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தும் திமுக அரசைக் கண்டித்தும், திமுகவின் கட்டளைக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசைக் கண்டித்தும்,
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தியும், அதிமுக வட சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.