பதவிச் சண்டையில் கொல்லப்பட்ட திமுக கவுன்சிலர்!
சென்னை: சென்னை மாநகராட்சி 93வது வார்டு திமுக கவுன்சிலர் சேரன் நேற்று காலை ராயப்பேட்டையில் உள்ள தனது வார்டு அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதவிச் சண்டையே காரணம் என்று தெரியவந்துள்ளது.
அவரை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டிவிட்டுத் தப்பியது. இதையடுத்து கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்தப் படையினர் ராயப்பேட்டை எம்.கே.ராதா நகரை சேர்ந்த சார்லஸ் (30), பள்ளிக்கரணையை சேர்ந்த ரமேஷ் (28), அம்பேத்கார் நகரை சேர்ந்த முனுசாமி (31), திரு.வி.க. குடியிருப்பை சேர்ந்த கார்த்தி (27) ஆகிய 4 கொலையாளிகள் கைது செய்துள்ளனர்.
அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில்,
ராயப்பேட்டை 93வது வட்ட திமுக செயலாளராக இருந்த ரவி மரணமடைந்ததை தொடர்ந்து அந்தப் பதவிக்கு வர அவரது மகன் ராஜ்குமார் முயற்சி செய்தார். ஆனால், இதற்கு சேரன் தடையாக இருந்தார். வட்டச் செயலாளர் பதவியை தனது மைத்துனர் அன்புவுக்கு அவர் வாங்கித் தந்தார்.
ஏற்கனவே ரவிக்கும், சேரனுக்கும் இடையே ஒரு நிலத்தை விற்றது தொடர்பாக முன்பகை இருந்து வந்தது. இதனால் தான் ரவியின் மகன் ராஜ்குமாரை பதவிக்கு வரவிடாமல் தடுத்தார்.
இது குறித்து எங்கள் நண்பரான ராஜ்குமாருக்கு எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டார். இதனால் சேரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவரது அலுவலகத்தில் வைத்தே வெட்டிக் கொன்றோம் என்று கூறியுள்ளனர்.
கொலையை செய்துவிட்டு இந்த 10 பேரும் மேல்மருவத்தூரில் போய் ஒரு இடத்தில் தங்கியுள்ளனர். இன்று காலை கோர்ட்டில் சரணடைய ஒரு ஆட்டோவில் சென்றபோது செங்கல்பட்டு அருகே உள்ள கருங்குளி என்ற இடத்தில் வைத்து அவர்களை போலீசார் மடக்கினர்.
இதில் 4 பேர் மட்டும் சிக்கிவிட மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இந்தக் கொலையில் ராஜ்குமார் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்ந்து 'பல்லு' மணி, 'பல்லு' மதன், 'காக்கா சண்டை' ரமேஷ், பாபு, சரவணன் ஆகிய 5 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கைதான சார்லஸ், கார்த்தி ஆகியோர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையல் உள்ளது. கொலைக்கு பயன்படுத்திய 2 கத்திகள், 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications