ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: சீன ஆதரவு கோரும் இந்தியா
பெய்ஜிங்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் கிடைக்க சீனாவின் ஆதரவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கோரினார்.
சீனா சென்றுள்ள அவர் அந் நாட்டு அதிபர் ஹூ ஜின்டாவோவிடம் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார்.
இந்தியாவும், சீனாவும் தூதரக உறவுகளை மேற்கொண்டு 60 ஆண்டுகளாகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 6 நாள் பயணமாக சீனா சென்றுள்ள பிரதிபாவுக்கு பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அவரை சீன பிரதமர் வென் ஜியாபோ வரவேற்றார்.
இதையடுத்து சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுடன், பிரதிபா இரு தரப்பு உறவுகள் குறித்தும், அதை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சு நடத்தினர். அப்போது விமான ஊழியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் ஒப்பந்தம், இரு நாடுகள் இடையே நிர்வாகரீதியான பிரச்சனைகளை தீர்ப்பது பற்றிய ஒப்பந்தம், விளையாட்டு துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஒப்பந்தம் ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
அந்த சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க சீனாவின் ஆதரவை பாட்டீல் கோரினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகியவை உள்ளன. இந்த கவுனசிலில் இந்தியாவுக்கும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து தர சீனாவும் அமெரிக்காவும் மறைமுகமாக எதிர்த்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் தான் சீனாவின் ஆதரவை இந்தியா நேரடியாகவே கோரியுள்ளது.
பின்னர் பிரதமர் வென் ஜியாபோவை பிரதிபா சந்தித்தபோது, இந்தியாவின் கோரிக்கையை பரிசீலிப்போம் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சீன மக்கள் காங்கிரஸ் தலைவர் ஹூ பாங்கோவையும், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சந்தித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் சீனா சென்றுள்ள முதல் இந்திய ஜனாதிபதி பிரதிபா தான் என்பது குறிப்பிடத்தக்கது.