காளகஸ்தி-மேலும் 4 கோபுரங்களில் விரிசல் அபாயம்: பக்தர்கள் புகார்
ஸ்ரீகாளகஸ்தி: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் ராஜகோபுரம் இரு தினங்களுக்கு முன் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
அதன் இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. விரைவில் அதே இடத்தில் புதிய ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது.
இந்நிலையில் கோவிலின் மேலும் 4 கோபுரங்களிலும் விரிசல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது.
4வது வாயிலில் உள்ள பால ஞானம்பிகா கோபுரத்தில் இருந்து அடிக்கடி மண விழுகிறது, சில சமயம் கற்களும் விழுகின்றன. இதனால் இந்தப் கோபுரத்தையும் மற்ற கோபுரங்களையும் சீரமைக்க வேண்டும். என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தக் கோபுரங்களை ஆந்திர அறநிலைய ஆணையர் பிரசாத் நேரில் பார்வையிட்டார். அவர் கூறுகையில், காளகஸ்தி கோவில் கட்டிடம், கோபுரம் அனைத்தையும் நிபுணர் குழு ஆராயும். அதன் பிறகு சீரமைக்கும் பணியை தொடங்குவோம் என்றார்.
திருப்பதி கோவில் நிர்வாகமும் நடவடிக்கை:
இந் நிலையில் திருப்பதி கோவில் மகாவாயில், வெள்ளி வாயில் கோபுரங்களில் ஆலமர செடிகள் வளர்ந்திருப்பதாகவும், இதனால் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டதையடுத்து அவற்றை அகற்ற திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த இரு 2 கோபுரங்களையும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, ஊழியர்களுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் தர்மா ரெட்டி கூறுகையில்,
கோவில் கோபுரங்களில் ஆலமரச் செடிகள் வளர்ந்துள்ளன. நிபுணர் குழுவின் ஆலோசனை பெற்று அந்த செடிகள் அப்புறப்படுத்தப்படும். கோபுரத்திற்கு சேதம் ஏற்படாதபடி அவை முழுமையாக அகற்றப்படும். கோபுரத்தில் செடிகள் வளர்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications