குறி வைக்கப்பட்டது எனக்கே!-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

பெங்களூரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் வாழும் கலை ஆசிரமத்தில் மர்ம மனிதன் துப்பாகிச் சூடு நடத்தினான்.
அது தன்னைக் கொல்ல நடந்த தாக்குதல் என்று ரவிசங்கர் கூறுவதை பெங்களூர் போலீசார் மறுத்துள்ளன்ர்.
ரவிசங்கரின் கார் சென்ற பின்னர் தான் துப்பாக்கிச் சூடே நடந்துள்ளது என்பதால் இது அவரை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், சீடர்களுக்குள் நடந்த மோதலில் நடந்துள்ள துப்பாக்கிச் சூடு என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
இதையே தான் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்த நேற்று அறிக்கைவிட்ட ரவிசங்கர், தனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்றும், ஆசிரமத்தில் நிலவிய 'பசிட்டிவ் எனர்ஜி' காரணமாகத் தான், துப்பாக்கியால் சுட்டும் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை, பக்தர்கள் அமைதியாக இருக்குமாறும் ரவிசங்கர் கூறியிருந்தார்.
மேலும் இதுகுறித்து ஆசிரம செய்தித் தொடர்பாளர் சாரு கூறுகையில், சத்சங் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ரவிசங்கர் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது அப்போதுதான் அந்த மர்ம மனிதர் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தால் ரவிசங்கர் பதற்றமடையவில்லை. இதையடுத்தும் வழக்கம் போல அவர் சீடர்களிடையே உரையாற்றினார் என்றார்.
இந் நிலையில் இது அவருக்கு வைக்கப்பட்ட குறி அல்ல என்று இன்று போலீசார் கூறியுள்ள நிலையில், இது தன்னைக் கொல்லவே நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், யாரோ என்னைத் தாக்க முயல்கின்றனர் என்றும் ரவிசங்கர் கூறியுள்ளார்.
இன்று நிருபர்களிடம் பேசிய அவர், துப்பாக்கிச் சூடு காரணமாக என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக உணர்கிறேன். ஆனாலும் இதுபோன்ற தாக்குதலால் நான் பயந்துவிட மாட்டேன். எனக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தி கொள்ளவும் விரும்பவில்லை. பாதுகாப்பு அதிகமாக இருந்தால் எனக்கும், பக்தர்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகிவிடும். அதை நான் விரும்பவில்லை.
என்னை சுட்டவரை நான் மன்னித்துவிட்டேன். அவரை நேரில் சந்திக்கவும் விரும்புகிறேன். அவர் என்னை சந்தித்துப் பேசினால் அவர் நிச்சயம் தனது மனதை மாற்றி கொள்வார். அவர் ஆசிரமத்துக்கு வர வேண்டும்.
இந்த சம்பவத்துக்கு நான் சொல்லும் பதில் அமைதி மட்டுமே. அஹிம்சையே என் பதில்.
எனக்கு எதிரிகள் யாரும் இல்லை. என் வாழக்கையில் ஒருபோதும் மற்றவரை புண்படுத்தும் வார்த்தைகளைக் கூட நான் பேசியதில்லை. இங்கு வரும் பக்தர்களுக்கு எந்த ஆபத்தும் நேரிடக்கூடாது என்பதே என் கவலை. தாக்குதலுக்கு மாற்று மதத்தினர் காரணமாக இருக்கலாம் என நான் கருதவில்லை.
அதே போல இது ஆசிரமத்தில் நிலவும் உள் பகையால் நடந்த தாக்குதல் என்றும், பக்தர்களுக்குள் நடந்த மோதில் நடந்த துப்பாக்கிச் சூடு என்றும் போலீசார் கூறுவது தவறு. ஆசிரமத்தில் யாருக்கு இடையிலும் மோதலோ, விரோதமோ இல்லை. இது போன்ற பேச்சுக்கள் என் மனதுக்கு வலியைத் தருகின்றன.
இதற்கு நான் என்ன பதில் சொல்ல. அப்படி யாராவது இதைச் செய்தது தெரியவந்தால் அவரை முதலில் போலீசில் ஒப்படைப்பவன் நானாகவே இருப்பேன்.
சம்பவம் நடந்தவுடன் உடனே ஏன் போலீசில் சொல்லவில்லை என்கிறார்கள். சம்பவம் நடந்தவுடன் எங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அது துப்பாக்கித் தாக்குதல் தானா என்பதை உறுதி செய்யவே எங்களுக்கு நேரம் பிடித்துவிட்டது. என்ன நடந்தது என்பதை அறியாமல் பீதியைக் கிளப்ப விரும்பாமல் தான் உண்மையைத் தெரிந்து கொண்டு போலீசுக்கு சொன்னோம்.
திடீரென பீதியைக் கிளப்பிவிட்டிருந்தால் பெரும் நெரிசல் ஏற்பட்டிருக்கும். அவ்வளவு பேர் அங்கு திரண்டிருந்தனர்.
என் ஆசிரமத்தை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆசிரமத்துக்கும் பிரச்சனை இருப்பதாக சொல்வதும் தவறு. அப்படியெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது நான் ஆசிரமத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறுவது தவறு. நான் அப்போது தான் காரில் ஏறிக் கொண்டிருந்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications