சென்னை: ஒரே இரவில் 4 பேர் படுகொலை!
சென்னை: சென்னையில் ஒரே நாள் இரவில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கொலை, ரெளடி உள்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கொலை:
சென்னை சேலையூர் கணேஷ் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சிவராமன் (76). இவரது மனைவி ராதா.
நேற்றிரவு ராதா வேளச்சேரி ரோட்டில் உள்ள தனது தங்கையின் வீட்டுக்கு சென்றுவிட்டுத் திரும்பி வந்தார். அபபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.
வீட்டுக்குள் ஒரு அறையில் சிவராமன் தலையில் படுகாயத்துடன் பிணமாகக் கிடந்தார். தலையணையால் முகத்தை அமுக்கி அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டிலிருந்த ரூ.50,000 கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
அக்காள் கணவரை கொன்ற சகோதரர்கள்:
மாங்காடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஞானவேல் (30). இவரது மனைவி கோடீஸ்வரி. இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து அவர்களை சமாதானப்படுத்த ஞானவேலின் அக்காள் கணவர் சம்பத்குமார் முயன்றார்.
அப்போது கோடீஸ்வரியின் அண்ணன்கள் பிரசாத், சுந்தரும் ஆகியோரும் வந்தனர். சமாதானப் பேச்சுர்த்தையின்போது ஞானவேலுக்கும், கோடீஸ்வரியின் அண்ணன்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடு்த்து ஞானவேலைத் தாக்கிய அவர்கள் அவரது தலையை சுவற்றில் மோதி கொலை செய்து விட்டு தப்பிவிட்டனர்.
கொலைக்கு பழிக்குப் பழி:
துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் அன்பு என்வருக்கும் இடையே கேபிள் டி.வி. தொழில் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இதில் அன்புவை சரவணன் கொலை செய்தார். இதற்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் அவரது மகன் ராஜேஷ் நேற்றிரவு சரவணனை கொலை செய்ய அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் இல்லாததால் அவரது மனைவி சரோஜாவையும், சரோஜாவின் மருமகன் காந்தியையும் வெட்டினார். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டனர். இதில் காந்தி இன்று காலை இறந்தார்.
பூந்தமல்லியில் ரெளடி கொலை:
பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் (32). இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகளும் உள்ளன.
ரெளடித்தனத்தில் ஈடுபட்டு வந்த இவர் நண்பருடன் மது அருந்திவிட்டு ஆட்டோ ஷெட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது.
இதில் கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்து அதே இடத்திலேயே முருகன் பலியானார்.
இந்த நான்கு கொலைகளும் நேற்றிரவு நடந்துள்ளன.
குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை-ஜாங்கிட்:
இந் நிலையில் சென்னை புறநகரில் குற்றங்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை புறநகரில் குற்றங்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியிருந்தோம். குற்றங்களை தடுக்க பொதுமக்கள் போலீசாருக்கு பல தகவல்களை அளித்துள்ளனர்.
பல்லாவரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகைக்காக அவருடைய உறவினர் கொலை செய்துள்ளார். அவரை போலீசார் திறமையாக செயல்பட்டு துப்பு துலக்கி குற்றவாளியை கைது செய்தனர்.
மிளகாய் பொடி தூவினால் மோப்ப நாய்க்கு மோப்பம் பிடிக்க முடியாது என்பது தவறான கருத்து. பல்லாவரம் வழக்கில் குற்றவாளி மிளகாய் பொடியை தான் தூவினான். ஆனால் இந்த வழக்கில் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளோம்.
குற்றங்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications