அக்ஷர்தாம் கோவில் தாக்குதல்-மூவருக்கு மரண தண்டனை: உறுதி செய்த குஜராத் ஹைகோர்ட்

2002ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி இந்த ஆலயத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 32 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில் முக்கிய குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. மேலும் 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து 6 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். தோஷித், கே.எம். தாகர் ஆகியோர், குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது நிருபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த முர்தஸா ஹபீஸ் யாசின், அஷ்ரப் அலி முகமது பரூக் ஆகிய இருவரையும் தேசிய பாதுகாப்புப்படை கமாண்டோக்கள் எதிர் தாக்குதலின்போது சுட்டுக் கொன்றனர்.
பிடிபட்ட தீவிரவாதிகளான ஆஸம் ஆஜ்மீரி, ஷான் மியா, முப்தி அப்சல் கயூம் மன்சூரி ஆகிய மூவருக்கும் 2006ம் ஆண்டில் மரண தண்டனை வழங்கப்பட்டது.
இவர்கள் தவிர, முகம்மத் ஷேக், அப்துல் மியான் காத்ரி, அல்தாப் ஹுசேன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 28 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் அல்லது வளைகுடா நாடுகளுக்குத் தப்பியிருக்கலாம் என்று குஜராத் போலீசார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications