7ம் தேதி கருணாநிதியை சந்திக்கிறார் முத்துசாமி
ஈரோடு: வரும் 7ம் தேதி தனது முதல்வர் கருணாநிதியை சந்திக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துசாமி.
ஜானகி அணியில் இருந்தவர் என்பதால் அதிமுக தலைமையால் 15 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முத்துசாமி அது குறித்து வெளிப்படையாக பேசியதால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஈரோட்டில் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர்களில் பெரும்பாலோர் திமுகவில் இணைந்துவிடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய முத்துசாமி,
எங்ளது ஆதரவாளர்களுடன் கலந்து பேசியதில் 99 சதவீதம் பேர் திமுகவில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து திமுகவில் சேருவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பேர் திமுகவில் இணைய உள்ளனர்.
முதல்வர் கருணாநிதி சட்டசபையில் பேசும்போது, தன்னை முதல்வராக்கியவர் எம்.ஜி.ஆர்.தான் என்று கூறியுள்ளார். எனவே, எம்.ஜி.ஆர். விசுவாசிகளான நாங்கள் திமுகவில் சேருவதில் எந்த நெருடலும் இல்லை. அதுவே உண்மையான எம்ஜிஆர் தொண்டர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
நாங்கள் கட்சியில் இணைவது பற்றி இதுவரை திமுக தலைமையிடம் பேசவில்லை. இரு பக்கமும் உள்ள பொதுவான நண்பர்கள் மூலம் தான் இது தொடர்பாக பேசி வருகிறோம்.
வரும் 7ம் தேதி ஒரு சிலருடன் சென்னை சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச உள்ளோம். இதன்பிறகு திமுகவில் இணைவது பற்றி பேசி முடிவு செய்யப்படும். திமுகவில் இணையும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications