விலைவாசி கட்டுப்படுத்தப்படும்!-மன்மோகன் சிங்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-ம் முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவுற்றதையடுத்து, அரசின் கடந்த ஆண்டு செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் வகையிலான அறிக்கையை (Report Card) மன்மோகன் சிங் டெல்லியில் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பிரதமர் பேசுகையில், தீவிரவாதத்தை வேரறுக்க அரசு உறுதி பூண்டுள்ளது. நக்ஸலைட்டுகளை ஒடுக்கி, அரசின் அதிகாரத்தை நிலைநாட்ட தேவையான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலவும்போதிலும் 8.5 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தாதது, 14 வயதுக்குள்பட்டோருக்கு கல்வியை அடிப்படை உரிமையாக்கியது, 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் தொடங்கியது, சுற்றுச் சூழல் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க மசோதா நிறைவேற்றியது உள்ளிட்டவை இந்த அரசின் கடந்த ஓராண்டு சாதனை.
நகர்ப்புற குடிசைவாசிகளின் மேம்பாட்டுக்கு ரூ.36 ஆயிரம் கோடியும், ஏர் இந்தியா நிறுவனம் மீட்சியடைய ரூ.1,200 கோடியும் ஒதுக்கப்படும் என்றார்.
பாஜக கடும் விமர்சனம்:
மன்மோகன் சிங் தனது அரசுக்கு தானே மார்க் போட்டுக் கொள்வது கேலிக்கூத்து என்றும், அரசின் ஓராண்டு சாதனையை மக்கள்தான் மதிப்பிட வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.
ஓராண்டு அறிக்கை பிரசார அறிக்கைதானே தவிர, உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றார் அருண் ஜேட்லி.












Click it and Unblock the Notifications