கருணாநிதி அறிக்கை வெளியிட தடை விதிக்க வேண்டும்: ஜெயலலிதா வக்கீல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேசிய அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, இந்த வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், நாங்கள் கேட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல், இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை, நகல் கிடைக்காமல் நாங்கள் எப்படி வாதாட முடியும் என்றார்.
இதற்கு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, அவர்களிடம் பழைய நகல் காப்பி உள்ளது. அதை வைத்தே வாதாடலாம். இந்த வழக்கின் விசாரணையை, எதிர் தரப்பினர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர், விசாரணைக்கு நாங்கள் தயாராகத் தான் இருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பில் தான், அனைத்து விவரங்களும் அடங்கியுள்ளன. இதனால் புதிய நகல் காப்பி கிடைத்தால் தான், நாங்கள் வாதாட முடியும்.
மேலும் இந்த நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது, வழக்கு குறித்து தினந்தோறும் அறிக்கைகளை, தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்டு வருகிறார். அதற்கு தடை விதிக்கவேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் காப்பிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று கூறி விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications