குறுவை நெல் சாகுபடி-ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள 3 லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் குறுவை சாகுபடிக்காக நீர் திறந்துவிடப்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.4 டி.எம்.சி. ஆகும். அதில் இப்போது 38 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது.
அணையில் குறைந்தது 50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசனத்துக்காக திறக்க முடியும். கடந்த ஆண்டில், ஜூன் 12ம் தேதியன்று வெறும் 23 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையில் இருந்ததால் குறிப்பிட்ட அந்நாளில் நீர் திறக்கப்படவில்லை.
இப்போது தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கிவிட்ட போதிலும், குறுவை சாகுபடிக்காக 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் தற்போது, 26 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஆனால், தனது அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதை கர்நாடகம் வழக்கமாக கொண்டிருக்கிறது.
இதனால் தற்போது மழை பெய்தாலும் கூட தனது அணைகளை நிரப்பிக் கொண்ட பிறகே தமிழகத்துக்கு தண்ணீரைத் தரும்.
ஜனவரி 1 முதல் ஜூன் 1 வரை கர்நாடகம் பாசனத்துக்கு தண்ணீரைத் திறக்கக்கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதை கர்நாடகம் தொடர்ந்து மீறி வருகிறது. இந்த ஆண்டும் தடையை மீறி, தனது மாநில பயிர்களுக்கு தண்ணீரை திறந்துவிட்டுவிட்டதால் தமிழகத்துக்குத் தர அணைகளில் தண்ணீர் இல்லாத நிலை நிலவுகிறது.
ஒகேனக்கல் திட்டம்-கர்நாடகம் புது நிபந்தனை:
இந் நிலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு என்ற பெயரில் ஒரு திட்டத்தை கர்நாடகம் தயாரித்துள்ளது.
இது குறித்து அம் மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறுகையில்,
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தற்போதைய கொள்ளேகால் தமிழகத்தின் கோவை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. பிறகு கொள்ளேகால் கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்டது.
இவ்வாறு சேர்க்கப்பட்டபோது ஒகேனக்கலில் காவிரி ஆற்றுப் பகுதியில் எல்லையைப் பிரிக்கும்போது கொள்ளேகால் பக்கம் 200 கிலோ மீட்டர் தூரம் கர்நாடகத்துடனும், எதிர்ப் பக்கத்தில் 200 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்துடனும் சேர்க்கப்பட்டது.
இந்த சமயத்தில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள தீவு போன்ற பகுதியில் எல்லை சரியாக நிர்ணயிக்கப்படவில்லை. அந்தப் பகுதியில்தான் தமிழக அரசு குடிநீர்த் திட்டத்தை மேற்கொள்கிறது.
இந்தத் திட்டத்தை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அங்கு எல்லை சரியாக வரையறுக்கப்படவில்லை. தமிழக அரசு குடிநீர் திட்டத்தைத் துவக்குவதுபோல் காவிரி ஆற்றில் சிவன்சமுத்திரத்தில் மின் திட்டத்தைத் துவக்க திட்டமிட்டுள்ளது.
இங்கு 345 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நீர் மின் உற்பத்தி திட்டத்தை கர்நாடகம் துவக்க தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. கர்நாடகத்தின் இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது.
இந்த மின் திட்டத்துக்குத் தேவையான தண்ணீரை காவிரி ஆற்றில் பெற்று அதே நீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும். இதனால் தமிழகத்தின் பங்கு நீரில் எந்தவித குறைவும் ஏற்படாது. அதே நேரத்தில் கர்நாடகத்தின் மின் உற்பத்தித் திட்டத்துக்கும் பாதிப்பு இருக்காது.
அங்கு மின்சாரத்தை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ளும். தண்ணீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும். இத்திட்டம் குறித்து மத்திய அரசுக்கும் கர்நாடகம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகம் தயாராக உள்ளது.
முதல்கட்டமாக இரு மாநில தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை விரைவில் துவங்க உள்ளது.
அதன்பிறகு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடைபெறும். தேவைப்பட்டால் இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசுவார்கள்.
எனவே, ஒகேனக்கல் பிரச்னையை இந்த சமரச திட்டத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். இதை ஏற்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.