நித்யானந்தாவை 9ம் தேதிக்குள் ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவு
ஸ்ரீபெரும்புதூர்: நித்யானந்தாவை வரும் 9ம் தேதிக்குள் ஆஜர்படுத்துமாறு கர்நாடக சிறைத்துறைக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா குஜாலில் ஈடுபட்ட காட்சிகள் வெளியானதையடுத்து ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வமணி, கடந்த மார்ச் 11ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், காவி உடை அணிந்து தவறுகள் செய்த நித்யானந்தா மீது, 295-ஏ சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி வழக்கை ஏற்ற நீதிபதி குணசேகரன், நித்யானந்தா ஏப்ரல் மாதம் 19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.
அன்று நித்யானந்தா ஆஜராகவில்லை. இதையடுத்து நித்யானந்தாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரை மே மாதம் 20ம் தேதி ஆஜர்படுத்துமாறு நித்யானந்தாவின் ஆசிரமம் அமைந்தள்ள கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந் நிலையில் நித்யானந்தாவை கர்நாடக போலீசார் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து கைது செய்து ராம்நகர் சிறையில் அடைத்தனர்.
இந் நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செல்வமணி இன்னொரு மனு தாக்கல் செய்தார். அதில், குற்றவியல் விசாரணை சட்டம் 267-ன் கீழ் சிறையிலிருக்கும் நித்யானந்தாவை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி குணசேகர், நித்யானந்தாவை வரும் 9ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ராம்நகர் மாவட்ட சிறைத்துறை எஸ்பிக்கு உத்தரவிட்டார்.