சென்னையில் தமிழில் பெயர் பலகைகள் வைக்க காலக்கெடு நீட்டிப்பு

இது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மாநகரில் ஏறத்தாழ 1 லட்சம் பெரிய, சிறிய கடைகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வகையான கடைகள், நிறுவனங்கள் ஆகியவை தமிழில் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி, பல்வேறு பகுதிகளில் வணிகப் பெருமக்கள் தங்கள் கடைகளில் பெயர்ப் பலகைகளை தமிழில் பெயர் மாற்றம் செய்து, விழிப்புணர்வு பேரணி நடத்தி, என் முன்னிலையிலேயே கடைகளில் தமிழ்ப் பெயர்ப் பலகைகளை திறந்து வைத்தனர்.
ஏறத்தாழ 50 சதவீத கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் சென்னை மாநகரில் உள்ள பல்வேறு வணிகர் சங்க பிரதிநிதிகள் சென்னை மாநகராட்சி மே மாதம் 31ம் தேதி வரை விதித்த காலக் கெடுவை நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசின் சட்ட திட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மூலம் மாற்ற வேண்டும் என்று எண்ணிடாமல் வணிகப் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகள் வைக்க காலக் கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 20ம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகைகளை திறந்திட வேண்டும். வணிகப் பெருமக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, இந்தக் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, சென்னை மாநகராட்சி இந்த மாதம் 21ம் தேதி கடைகளில் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்காத நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை அகற்றும் சூழ்நிலையை உருவாக்காமல் வணிகப் பெருமக்கள் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, அனைவரும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
20ம் தேதிக்குப் பிறகு தமிழில் பெயர்ப் பலகைகள் வைத்திடாத கடைகளின் பலகைகளை எந்தவித தயவு தாட்சண்யமின்றி சென்னை மாநகராட்சி நிச்சயம் அகற்றும் என்பதையும் உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications