வறுமை-சேலம் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
சேலம்: சேலம் அருகே வறுமையின் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அரிராம் (58). இவர் தனது மனைவி ராஜேஸ்வரி (50), மகன் வரதராஜன் (34), மருமகள் ஜீவா (30), பேரக் குழந்தைகள் வாணிஸ்ரீ (10), சந்தோஷ்குமார் (ஒன்றரை வயது) ஆகியோருடன் வசித்து வந்தார்.
வீட்டிலேயே தறிக்கூடம் வைத்திருந்த அரிராம், தனது மகன் வரதராஜனுடன் நெசவுப் பணியில் ஈடுபட்டு வந்தார். அதில் குடும்பம் நடத்த போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வரதராஜன் வீட்டை விட்டு வெளியேறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விபரமும் தெரியவில்லை.
இந் நிலையில், அரிராம், ராஜேஸ்வரி, ஜீவா, குழந்தைகள் வாணிஸ்ரீ, சந்தோஷ்குமார் ஆகியோர் வீட்டில் விஷம் குடித்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தில் இருந்துவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள் அரிராமும், ராஜேஸ்வரியும் உயிரிழந்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்ட ஜீவா, குழந்தை வாணிஸ்ரீ ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மீதமுள்ள ஒன்றரை வயது குழந்தை சந்தோஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications