காயிதே மில்லத் நினைவிடத்தில் கருணாநிதி-ஜெ மரியாதை
சென்னை: மறைந்த தலைவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்தின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் கருணாநிதி இன்று காலை மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள்,
முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத்தின் 115 வது பிறந்தநாளையொட்டி, ஜெயலலிதா அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதா...
அதே போல காயிதே மில்லத் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், எம்பிக்கள், எல்ஏக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதே போல காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஜே.எம்.ஆரூண் எம்.பி உள்ளிட்டோரும்,
பாமக சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோரும்,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரும் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
இஸ்லாமியர்கள் அரசியல் சக்தியாக மாற வேண்டும்-திருமா.
இந் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கண்ணியத் தமிழர் காயிதேமில்லத் அவர்களின் 115ம் பிறந்த நாளில் (ஜூன்- 5, 2010) இஸ்லாமியப் பெருங்குடி மக்களுக்கும் இன்னபிற சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அரசியலில் போற்றுதலுக்குரிய பெருந்தலைவராக விளங்கிய கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் அவர்கள் இஸ்லாமியச் சமூகத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் சமூகத்தினருக்காகவும் பாடுபட்ட மிகச் சிறந்த ஜனநாயகச் சிந்தனையாளராவார்.
அன்னைத் தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழ்ப் பற்றாளராவார். இந்து, முஸ்லிம் என்கிற மதவெறி உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் வன்முறைகளுக்கு ஊக்கமளித்தோருக்கிடையில், அத்தகைய மதவெறி உணர்வுகளுக்கெதிராக சமூக நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர்.
அதாவது, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இந்திய தேசிய நலன்களுக்காகவும் தொடர்ந்து களப்பணியாற்றியவர். அத்தகைய மாமனிதரின் கனவுகளை நனவாக்கும் வகையில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவரும் அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டும்.
கண்ணியத் தமிழரின் ஜனநாயகச் சிந்தனைகளையும் சமூக நல்லிணக்க அணுகுமுறைகளையும் போற்றிப் பாதுகாத்திட அவர்தம் பிறந்தநாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications