ஜெயலலிதாவால் இனி ஆட்சிக்கு வரவே முடியாது - மு.க.ஸ்டாலின்
தஞ்சாவூர்: அதிமுக இனிமேல் ஆட்சியைப் பிடிக்க முடியாது. ஜெயலலிதாவால் ஆட்சிக்கு வரவே முடியாது என்று கூறியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஸ்டாலின் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று தஞ்சை வந்தார்.
ரயில் நிலையத்தில் வரவேற்பு முடிந்ததும் கார் மூலம் தஞ்சை சங்கம் ஓட்டலுக்கு சென்று ஓய்வு எடுத்தார். பிறகு காலை 9 மணிக்கு தஞ்சை ஆரோக்கிய சந்தன மகாலில் நடைபெற்ற தி.மு.க. பிரமுகர் திருமணத்தை நடத்தி வைத்து மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், 1967-ம் ஆண்டுக்கு முன்பு சீர்திருத்த திருமணம் நடைபெறுகிறது என்றால் அதற்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. அதன் பிறகு தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அறிஞர் அண்ணா முதல்வராக பதவி ஏற்று சட்டமன்றத்தில் முதல் முதலாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்ற தீர்மானமாகும்.
தலைவர் கலைஞர் 14 வயதில் பள்ளி மாணவனாக படித்துக்கொண்டு இருந்தபோதே தனது நண்பர்களை திரட்டி இந்தி திணிப்பை எதிர்த்து திருவாரூர் வீதிகளில் ஊர்வலம் நடத்தி போர் பரணி பாடியவர். கலைஞர் இந்த மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்த இருக்கிறார்.
கலைஞர் ஆட்சியில் எத்தனையோ சிறப்பான திட்டங்கள் செயல்பட்டு வந்தாலும் கலைஞர் வீட்டு வசதி திட்டம் திருச்சியில் சிறப்பாக தொடங்கப்பட்டது.
டெல்லியில் உள்ள அரசியல்வாதிகள் காரசாரமாக விவாதித்துக் கொண்டாலும் வெளியில் நட்புடன் பழகுவார்கள். அதேபோல இங்கும் அனைத்து கட்சிகளும் எவ்வளவு விவாதித்துக் கொண்டாலும் வெளியில் நட்புடன் பழக வேண்டும் என்ற நோக்கில் கலைஞர் வீட்டு வசதி திட்ட தொடக்க விழாவுக்கு எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க கலைஞர் சொன்னார்.
அதன்பேரில் நான் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. தலைவர் ராமதாஸ். ம.தி.மு.க. தலைவர் வைகோ உள்பட எல்லோருக்கும் கடிதம் எழுதினேன். தொலை பேசியிலும் பேசினேன். வேறு பணி காரணமாக கலந்து கொள்ள இயலாது என்று ஜெயலலிதா கடிதம் எழுதினார். ஆனால் நிகழ்ச்சி நடந்த அன்று கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார்.
சட்டமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவுக்கும் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனாலும் கலந்து கொள்ளவில்லை. அன்மையில் ஜெயலலிதா கலந்து கொண்ட விழாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டசபை கூட்டம் புதிய வளாகத்தில் நடைபெறாது. பழைய சட்டசபை வளாகத்தில் தான் நடைபெறும் என்று பேசினார். இதில் இருந்தே அவர்கள் ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரிகிறது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications