திருடர்களின் சொர்க்கமாகும் சென்னை- ஒரே நாளில் 11 கொள்ளைச் சம்பவங்கள்
சென்னை: சென்னை நகரில் ஒரே நாளில் 11 கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளது மக்களை பதற வைத்துள்ளது.
சனிக்கிழமை நடந்த இந்த 11 கொள்ளைச் சம்பவங்களில் 37.5 பவுன் தங்க நகைள், 25 கிலோ வெள்ளி, ரூ. 5.93 லட்சம் ரொக்கம், ரூ. 48,000 மதிப்புள்ள பிற பொருட்கள் களவு போயுள்ளன.
இந்த கொள்ளைச் சம்பவங்களிலேயே மிகவும் துணிகரமான கொளத்தூரில் நடந்த நகைக் கடைக் கொள்ளையாகும். செங்குன்றம் சாலையில் ரிஷிஜூவல்லரி என்ற கடை உள்ளது. அந்தக் கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள்அங்கிருந்து 25 கிலோ வெள்ளி நகைகள், ஒரு பவுன் தங்க நகை, பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
நேற்று காலை கடை ஊழியர் கடைக்கு வந்தபோதுதான் திருட்டு குறித்துத் தெரிய வந்தது. கடையின் பின்பக்கமாக சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்து திருடியுள்ளனர் கொள்ளையர்கள்.
ராஜமங்கலம் பகுதியில், ஜெய் கணேஷ் பாபு என்ற சாப்டவேர் என்ஜீனியர் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அந்த சமயமாக பார்த்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 15 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பியுள்ளனர்.
ஐஸ்ஹவுஸ் பகுதியில், விஜய்குமார் என்பவர் வீட்டில் புகுந்த திருடர்கள் 11 பவுன் நகையை திருடியுள்ளனர்.
அதேபோல, அம்பத்தூரைச் சேர்ந்த சிவில் என்ஜீனியர் ராமலட்சுமி என்பவர் முகப்பேரில் அவர் கட்டி வரும் வீட்டுக்காக, வீட்டு உரி்மையாளரிடமிருந்து ரூ. 1 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு வந்தபோது, அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில், மொபட்டில் தொங்க விடப்பட்டிருந்த பணப் பை காணாமல் போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் கட்டுமான ஊழியர்களுக்கு கொடுத்த ரூ. 10,000 போக மீதம் ரூ. 90,000 பணம் இருந்தது.
இதேபோல கே.கே.நகர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, யானைகவுணி, அபிராமபுரம் ஆகிய பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. யானைகவுணியில் மட்டும் 3 சம்பவங்கள் நடந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications