தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க ஜெ. கோரிக்கை
சென்னை: தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை திமுக அரசு கைவிட்டதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால் அதிகம் பாதிப்படைந்த மாவட்டம் தர்மபுரி. தர்மபுரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீருக்காக மக்கள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற குடிநீரை பருகுவதால் மலேரியா, காலரா போன்ற நோய்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகி வருகிறார்கள்.
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைக் கூட திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை திமுக அரசு கைவிட்டதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துவிட்டது.
இதனால் விவசாய நிலங்களில் பயிரிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாகுபடி செய்த பயிர்களையும், கால்நடைகளையும் காப்பாற்ற முடியாத அவல நிலை நிலவுவதாக தகவல்கள் வருகின்றன.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று திமுக அரசு விளம்பரப்படுத்திக் கொள்கிறது. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. மொத்தத்தில் தர்மபுரி மாவட்டம் கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. இந்த மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்தைப் போக்க திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், குடிநீர் பஞ்சத்தைப் போக்க வேண்டும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும், மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஜெயலலிதா பேரவைச் செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சிறுதாவூர் நிலம்-மார்க்சிஸ்ட் இன்று ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் சசிகலாவின் உறவினர்கள் முதலீடு செய்துள்ள ரிசார்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை மீட்டு தலித் மக்களுக்கும், நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அக் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.