கைதிகளுக்கு விருந்து புரோட்டா, பாயாசம் விருந்து - சிறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
நெல்லை : பாளையங்கோட்டை சிறை கைதிகளுக்கு புரோட்டா, பாயாசம் தயாரித்து விருந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் சிலர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல நேற்றிரவு குடிபோதையில் ரகளை செய்த வார்டன் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1600க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இங்குள்ள 10 பிளாக்குகளில் கைதிகள் தனித் தனியாக பிரிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வெளி சிறையில் விசாரணை கைதிகளும், உள்சிறையில் தண்டனை கைதிகளும் உள்ளனர். கடந்த 1998ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் நடந்த ஜாதி கலவரத்திற்கு பிறகு சிறையிலும் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டதால் அவர்கள் ஜாதிவாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனி செல்களில் அடைக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லையை சேர்ந்த ஜாதி பிரமுகரின் நினைவு நாளை கொண்டாடும் வகையில் கைதிகள் சிலர் சிறைக்குள்ளேயே பாயாசம், புரோட்டா தயாரித்து கைதிகளுக்கு பார்ட்டி நடத்தியுள்ளனர். இதுகுறித்து சிறை துறை ஏடிஜிபி சியாம் சுந்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பாளையங்கோட்டை துணை ஜெயிலர் ஆறுமுகம் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார். இதுபோல் கொக்கிரகுளம் மகளிர் சிறை கண்காணிப்பாளர் முத்துராமலிங்கமும் மதுரைக்கு மாற்றப்பட்டார்.
நாகர்கோவில் கிளை துணை சிறை அலுவலர் சதாசிவம் பாளையங்கோட்டை சிறைக்கும், நாங்குநேரி கிளை சிறை கண்காணிப்பாளர் சூசைமறியான் கொக்கிரகுளம் கிளை சிறை கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு சிறை வார்டன் பாலசுப்பிரமணியன் என்பவர் குடிபோதையில் பணிக்கு வந்துள்ளார். மேலும் அவர் சிறை அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசி ரகளையி் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பாலசுப்பிரமணியனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குடிபோதையில் இருந்ததற்கான சான்றிதழும் பெறப்பட்டது. இச்சம்பவம் பாளையங்கோட்டை சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications