நாளை கட்சி அலுவலகம் வருகை - தொண்டர்களிடம் மனு பெறுகிறார் ஜெ.
சென்னை: அதிமுக தலைமைக் கழகத்திற்கு நாளை வரும் கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தொண்டர்களிடம் மனு பெறவுள்ளார்.
அதிமுக தேய் பிறையாகி வருகிறது. ஏராளமான பேர் அணி அணியாக வெளியேறி வருகின்றனர். தொண்டர்கள் மட்டுமல்லாமல், பல முக்கியப் பிரமுகர்களும் வெளியேறி வருவதால், தீவிர அதிமுக அனுதாபிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
கட்சியை விட்டுப் போகும் அனைவருமே சொல்லும் முக்கியக் குற்றச்சாட்டு- ஜெயலலிதாவை அணுக முடிவதில்லை, பார்க்க முடிவதில்லை, குறைகளை நிறைகளை சொல்ல முடிவதில்லை என்பதுதான்.
கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் மீது புகார் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் கூட ஜெயலலிதாவின் தரிசனம் யாருக்கும் கிடைப்பதில்லை. யாருமே அணுக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டைக்குள் இருக்கிறார் பெண் சிங்கம் என்று தொண்டர்களால் ஒரு நேரத்தில் வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதா.
இந்த நிலையில் கட்சித் தொண்டர்கள் ஜெயலலிதாவைப் பார்க்கலாம், அவரிடம் தத்தமது குறைகளைக் கூறி மனு கொடுக்கலாம் என்று அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, புதன்கிழமை பிற்பகல் 2 மணி அளவில், சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்திற்கு வருகை தர உள்ளார்.
அப்போது, பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க விரும்பும் கழக தொண்டர்கள், தலைமைக்கழகத்திற்கு வந்து பொதுச்செயலாளரை சந்தித்து மனுக்களை கொடுக்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.
இப்படி என்றாவது ஒரு நாள் குறை கேட்பது எந்த அளவுக்கு அதிமுகவுக்குப் பலன் தரும் என்று தெரியவில்லை. தினசரி தொண்டர்களும், கட்சிப் பிரமுகர்களும் ஜெயலலிதாவை தாராளமாக சந்திக்க வகை செய்ய வேண்டும். கட்சி அலுவலகத்திற்கு அவரும் தினசரி ஒருமுறையாவது வந்து போக வேண்டும். அப்போதுதான் கட்சி இயங்குகிறது என்ற எண்ணம் தொண்டர்களுக்கு வரும் என்பது தீவிர அதிமுக தொண்டர்களின் ஒரே கருத்தாக உள்ளது.
கே.ஏ.கிருஷ்ணசாமி படத்தை திறந்து வைத்த ஜெயலலிதா:
இந் நிலையில் கட்சியில் நீண்ட காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமியின் ராயப்பேட்டை வீட்டுக்கு ஜெயலலிதா இன்று காலை சென்றார்.
கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகனும், அதிமுக இளைஞர் அணி துணைத் தலைவருமான கே.ஏ.கே. முகில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கே.ஏ.கிருஷ்ணசாமி உருவ படத்தை திறந்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தளவாய்சுந்தரம், ஜெயக்குமார், வளர்மதி, சேகர்பாபு, கலைராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications