இழுத்துக் கொண்டு போகும் வழக்கு - குமரி அனந்தன் திடீர் உண்ணாவிரதம்
வள்ளியூர்: நில வழக்கை விரைவாக முடிக்காமல் இழுத்தடித்து வரும் கோர்ட்டுக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் வள்ளியூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து சமரசப்படுத்தவே, போராட்டத்தை விலக்கிக் கொண்டார் குமரி அனந்தன்.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்திப்பு அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தின் ஒரு பகுதியை காவல்கிணறை சேர்ந்த சுடலைமாட நாடார் என்பவர் உரிமை கொண்டாடி வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குமரி அனந்தனும் வள்ளியூர் கோர்ட்டில் அவ்வப்போது விசாரணைக்கு ஆஜரானார். இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு வள்ளியூர் மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி கவுதம் முன்னிலையில் குமரி அனந்தன் விசாரணைக்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது வழக்கு சம்பந்தமாக எந்த விசாரணையும் நடக்காததால், அவர் மன உளைச்சல் அடைந்து கோர்ட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் வள்ளியூர் மெயின் ரோட்டில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கு அருகே தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று காரில் அமர்ந்தபடி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.
இந்த தகவல் வள்ளியூரில் பரவி அனந்தனின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அங்கு கோஷம் எழுப்பினர்.
இதை அறிந்த போலீஸ் அதிகாரிகளும், வருவாய் அதிகாரிகளும் குமரி அனந்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உண்ணாவிரத போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டனர். அதன் பின்னர் போராட்டத்தை அவர் கைவிட்டார்.
தமிழக கோர்ட்களில் தொடரப்பட்டுள்ள சிவில் வழக்குகளின் எண்ணிக்கை பல லட்சமாகும். அத்தனையும் ஆண்டுக் கணக்கில் ஜவ்வாக இழுத்துக் கொண்டுதான் போகின்றன. இதுபோன்ற நில வழக்குகள் குறுகிய காலத்தில் முடிந்ததாக சரித்திரமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications