கூட்டணிக்கு 'காடுவெட்டி' குருவின் பேச்சு தடையாக இருக்காது-ராமதாஸ்

திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்க முயன்று வரும் நிலையில், திமுக நடந்து கொள்ளும் முறையால் பாமக நிர்வாகிகள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது.
இந் நிலையில் திமுக முதுகில் குத்தி விட்டதாக பாமக முக்கிய தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குரு பூம்புகாரில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் நிருபர்கள் சுட்டிக் காட்டியபோது, ''புராணத்தில் குரு என்றால் யார்? (சுக்ராச்சாரியார்) அவர் நல்ல காரியங்களைக் கெடுத்துக் கொண்டிருந்தார். குருவிற்கு அவ்வளவு தான் விளக்கம்'' என்று பதிலளித்தார்.
இந் நிலையில் கூட்டணி குறி்த்து விவாதிக்க இன்று மீண்டும் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார் ராமதாஸ்.
சென்னை ஸ்டார் சிட்டி ஹோட்டலில் நடந்த இக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி, மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் குரு, மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், திருக்கச்சூர் ஆறுமுகம் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரி வருகிற 15ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க கோரி 21ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து 10ம் ந்தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் டாக்டர் ராமதாஸ் கருத்துக்களை கேட்டறிந்தார்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், திமுக-பாமக கூட்டணிக்கு காடுவெட்டி குரு தடையாக இல்லை. மாவீரனான குரு மிக மிக நல்லவர். உண்மையைத்தான் பேசுவார். அவருடைய பேச்சு கூட்டணிக்கு தடையாக இருக்காது.
கூட்டணி குறித்து பாமக குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும். இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் கூட்டணி குறித்து நாங்கள் பேசவில்லை, உட்கட்சி தேர்தல் குறித்துதான் பேசப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications