பாஜகவுடனான உறவை முறிக்க நிதீஷ் குமாருக்கு நெருக்குதல் அதிகரிப்பு

குஜராத் அரசு வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் பீகார் முதல்வர் நிதீஷ்குமாருடன், முதல்வர் நரேந்திர மோடி கைகோர்த்திருப்பதைப் போல படம் இடம் பெற்றிருந்தது. இது நிதீஷ்குமாருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. இந்த விளம்பரப் படத்தால் பீகாரில் முஸ்லீம் சமுதாயத்தினரின் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சம் ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த விளம்பரப் படத்திற்கு நிதீஷ் குமார் கடும் ஆட்சேபனையும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தார். தனது எதிர்ப்பைக் காட்டும் வகையில், பீகாரில் தொடங்கியுள்ள பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பாஜக தலைவர்களுக்கு சனிக்கிழமை இரவு அளிப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சியை அவர் ரத்து செய்துவிட்டார்.
இந்த நிலையில், பாஜகவுடனான உறவை நிதீஷ் குமார் முறித்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய ஜனதாதள கட்சிக்குள்ளேயே நெருக்கடி முற்றியுள்ளது.
ஐக்கிய ஜனதாதள எம்.பிக்களான மொனசீர் ஹசன், ராஜீவ் ரஞ்சன் ஆகிய இருவரும் உடனடியாக பாஜகவுடனான உறவை நிதீஷ் குமார் முறித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஹசன் கூறுகையில், பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்ள நமக்கு இது நல்ல சமயம். வருகிற சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் தனித்துப் போட்டியிட வேண்டும். மீண்டும் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது என்ற சதி வேலையாகத்தான் இந்த விளம்பரத்தை பாஜகவினர் பிரசுரித்துள்ளனர் என்றார். இவர் நிதீஷ்குமாரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
நிதீஷ் குமாருக்கு எதிர் முகாமில் உள்ளவரான ராஜீவ் ரஞ்சன் என்கிற லலன் சிங் கூறுகையில், கடவுளே பார்த்து இந்த நல்ல சந்தர்ப்பத்தை நிதிஷ் குமாருக்குக் கொடுத்துள்ளார். இதை நிதீஷ் குமார் பயன்படுத்திக் கொண்டு பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.
இந்த விளம்பரம், வருண் காந்தியின் பீகார் பயணம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது பாஜக அரசியல் விளையாட்டில் இறங்கியிருப்பது புலனாகிறது.
பாஜகவுடனான உறவை உடனடியாக நிதீஷ் குமார் முறித்துக் கொள்ள வேண்டும். சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றார்.
முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவும், பாஜக உடனான உறவை நிதீஷ் குமார் முறித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜக தலைவர்களுக்கு அளிக்கவிருந்த விருந்தை நிதீஷ் குமார் ரத்து செய்ததை நான் வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். அதேபோல உறவையும் அவர் முறித்துக்கொள்ள வேண்டும் என்றார்.
கட்சிக்குள் மட்டுமல்லாமல் கட்சிக்கு வெளியேயும் நிதீஷ் குமாருக்கு நெருக்குதல்கள் அதிகரித்துள்ளன.
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், நிதீஷுக்குத் தைரியம் இருந்தால், பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும். தான் சுத்தமானவன் என்பதை நிரூபிக்க முன்வர வேண்டும் என்று சவால் விட்டார்.
இதேபோல, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவையும் இந்த சர்ச்சை விளம்பரம் தொடர்பாக நிதீஷை சாடியுள்ளன.
கட்சிக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் நெருக்கடிகள் அதிகரித்து வருவதால் பாஜகவுடனான உறவை நிதீஷ் குமார் முறிக்க முன்வரலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications