இந்துக்களுக்கு சம உரிமை கோரி இந்து முன்னணி மாநாடு
கரூர்: இந்துக்களுக்கு சம உரிமை கோரி இந்து முன்னணி சார்பில் கரூரில் வரும் 20ம் தேதி மாநாடு நடத்தப்படுகிறது.
இது குறித்து இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்து முன்னணியின் 6வது மாநில மாநாடு வரும் 20ம் தேதி கரூரில் நடைபெறுகிறது. கோவில் நிர்வாகம், கல்வி, அரசின் சட்டங்கள், அரசின் சலுகைகள் முதலியவற்றில் முஸ்லிம், கிருஸ்தவர்களுக்கு உள்ளது போல் இந்துக்களுக்கும் சம உரிமை கேட்க இந்த கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.
மதசார்பற்ற அரசுக்கு இந்துக்களின் ஆலயத்தில் என்ன வேலை?. எனவே, ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்ட இந்துக்களை கொண்ட தனிவாரியம் அமைத்து ஆலயங்களை ஆன்மிக கேந்திரமாக்க வேண்டும்.
சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் கோவில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சாலையை மறித்து நிற்கின்ற தர்கா, மசூதி, சர்சுகள் மீது அரசு கைவைப்பதில்லை. அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
ஹஜ் செல்லும் முஸ்லிம்களுக்கு மானியம் வழங்கும் மத்திய, மாநில அரசுகள், காசி, ராமேஸ்வரம், கைலாஷ் செல்லும் இந்துக்களுக்கு வரி விதிக்கின்றன. எனவே, பாகுபாடு இல்லாமல் இந்துக்களுக்கும் சலுகை வழங்க வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் கரூர் மாநாடு நடக்கிறது என்றார்.