அகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங்
அமர் சிங் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். அவர் உத்தரப் பிரதேச அரசியலிலும், தேசிய அரசியலிலும் முக்கிய பங்கு ஆற்றினார் அல்லது முக்கியஸ்தர் போல காட்டிக் கொண்டார். அதேநேரத்தில் அமிதாப்பச்சனின் நிழல் போல கூடவே உலா வந்து கொண்டிருந்தார்.
அவரது ஆதிக்கம் கட்சிக்குள் வலுத்ததால், உட்கட்சிப் பூசல் வெடித்து அதில் சிக்கி வெளியேற்றப்பட்டார் அமர். கூடவே அமரின் நிழல் போல இருந்து வந்த நடிகை ஜெயப்பிரதாவையும் கல்தா கொடுத்து அனுப்பி வைத்து விட்டார் முலாயம் சிங்யாதவ்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள அகில பாரதிய லோக் மஞ்ச் கட்சியின் தேசியத் தலைவராக அமர்சிங்கும், துணைத் தலைவராக நடிகையும், எம்.பி.யுமான ஜெயப்பிரதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாலிவுட் நடிகரும், சமாஜ்வாதிக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான சஞ்சய் தத், கட்சியின் பொதுச் செயலாளராகவும், போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரி கட்சியின் கலைப் பிரிவு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அமர்சிங், தங்கள் கட்சி தனி பூர்வாஞ்சல் மாநிலம் உருவாகப் போராடும் என்று தெரிவித்தார்.