உடல்நிலை மோசம்.. யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பார்வதி அம்மாள்!
சில வாரங்களாக வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் புதன்கிழமை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று இலங்கை தமிழ் இணைய தளங்கள் தெரிவித்துள்ளன.
அவரது உடல்நிலை மோசமானதையடுத்து, மேல் சிகிச்சைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக உரிய விசா பெற்று வந்த பார்வதி அம்மாளை விமான நிலையத்தில் இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர் இந்திய அதிகாரிகள்.
தமிழ் உணர்வாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் சிகிச்சை பெற வேண்டுமானால், பார்வதி அம்மாள் மருத்துவமனையில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும், அரசியல் பிரமுகர்களைப் பார்க்கக் கூடாது என்று மத்திய - தமிழக அரசுகள் நிபந்தனை விதித்திருந்தன. இதன் பின்னர் மலேசியாவில் இருந்து பார்வதி அம்மாள் சென்னைக்கு வராமல் இலங்கை சென்று விட்டார்.
அவர் தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற விரும்புகிறார் என்பது தெரிய வந்தது. எனவே நிபந்தனைகளை தளர்த்தலாமா என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. அதற்கு பார்வதி அம்மாள் தமது மகள் வீட்டில் தங்கியிருக்க ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள புதிய கடிதம் ஒன்றில், பார்வதி அம்மாள் தமது மகள் வீட்டில் தங்கலாம். நண்பர்கள், உறவினர்கள் சந்திக்கலாம். ஆனால் அரசியல் கட்சியினர், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் சந்திக்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் பார்வதி அம்மாள் நிலை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது.
சிகிச்சை பெறுவதற்கான நிபந்தனையை மத்திய அரசு தளர்த்தினாலும், அதைப் பரிசீலிக்கும் மன நிலையில் பார்வதி அம்மாள் இல்லை என்று அவரது உறவினரும், முன்னாள் எம்.பியுமான சிவாஜிலிங்கம் கூறியிருந்தார்.
மேலும் பார்வதி அம்மாள் முழுமையாக குணமாகவில்லை. ஆனால் நபர்களை அவர் அடையாளம் கண்டு கொள்கிறார். அவருடைய கனடா மகள் தொடர்ந்து தொலைபேசி மூலம் தனது தாயாரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறார் என்றார்.
இந்நிலையில் பார்வதி அம்மாளின் உடல்நிலை மோசமானதையடுத்து, மேல் சிகிச்சைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனை வல்வெட்டித் துறை மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.