அமெரிக்காவில் இருப்பவருக்கு கரூர் தேமுதிகவில் பதவி- தொண்டர்கள் குற்றச்சாட்டு!
கரூர்: கூட்டணி சேரப் போவதாலோ என்னவோ, கூட்டணி சேரப் போகும் கட்சியில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் தேமுதிகவிலும் நடக்க ஆரம்பித்துவிட்டன.
இறந்து போனவர், கட்சியை விட்டு விலகியவருக்கு எல்லாம் தேமுதிக கூட்டணி சேரவுள்ள கட்சியில் பதவிகள் தரப்பட்டதாக அவ்வப்போது செய்திகள் வருவது வழக்கம். இதை தொண்டர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் தான் அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கும் தலைமைக்கும் தவறு தெரியவரும்.
இந் நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட தேமுதிகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பணம் கொடுத்தால் பதவி தேடி வரும் என்ற அவல நிலை ஏற்பட்டுவிட்டதாக தேமுதிக தொண்டர்கள் அதன் தலைவர் விஜயகாந்துக்கு புகார் அனுப்பி வருகின்றனர்.
குறிப்பாக கரூர் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கேவை கண்டித்து புகார்கள் குவிந்துள்ளதாம்.
அந்தப் புகாரில், வெளியூரில் உள்ளவர்கள் ஏன் வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் கூட பணம் கொடுத்தால் கரூர் மாவட்ட தேமுதிகவில் நிர்வாகியாக இடம் பெற முடியும் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பஞ்சபட்டி பாலன் என்பவர் திருப்பூரில் உள்ளார். அவருக்கு கரூர் மாவட்ட துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று புனேவில் வசிக்கும் தனுஷ்கோடி என்பவருக்கு அரவாக்குறிச்சி ஒன்றியப் பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதைவிடக் கொடுமை அமெரிக்காவில் உள்ள சுகு. அரவிந்த் என்பவருக்கு மாவட்ட பொறியாளர் அணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த புகார்களை கரூர் மாவட்ட தேமுதிக மாவட்ட தலைமைக் கழகம் மறுத்துள்ளது.