சிறுதாவூர் நிலத்தை மீட்கக்கோரி திமுக ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம்: சிறுதாவூரில் தலித் நிலங்களை மீட்கக்கோரி திமுக சார்பல் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திருப்போரூர் அருகே சிறுதாவூர் கிராமத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்கும் பங்களா உள்ளது.
பங்களா அருகில் சிறுதாவூர் கிராம தலித் மக்களுக்காக அரசு வழங்கிய சுமார் 53 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு ரிசார்ட்ஸ் நிறுவனம் பணம் கொடுத்து அபகரித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலத்தை மீட்பது குறித்து ஆராய தமிழக அரசால் நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை கமிஷன் சமீபத்தில் தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
விசாரணை கமிஷன் பரிந்துரைப்படி ஆக்கிரமிப்பு நிலங்களை கைப்பற்றி ஏழை தலித் மக்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்றும் பங்களாவுக்குள் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையும் மீட்கக்கோரியும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காஞ்சீபுரம் மாவட்ட திமுக சார்பில் பழைய மகாபலிபுரம் சாலை ஆலத்தூர் கிராமத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர்.
சுமார் 1 மணி நேரம் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிலத்தை மீட்கக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறுதாவூர் பங்களாவுக்கு 1 கிமீ தூரத்தில் தான் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
பங்களா அருகே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் யாரும் உள்ளே நுழைந்துவிடாமல் தடுக்கதப்பட்டது. மேலும் போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் நடந்தபோது சிறுதாவூர் பங்களா வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன், ராஜேந்திரன், திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ. கனிதா சம்பத், அதிமுக ஒன்றியச் செயலாளர் மனோகரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கூடியிருந்தனர்.
ஜெயலலிதா, கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வில் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications