11 மாத பச்சிளம் குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற 'ஜிம் மாஸ்டர்' தந்தை
சென்னை: 11 மாத குழந்தையை கொலை செய்து பிணத்தை புதைத்துவிட்டு நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டார். அவரது மனைவியே அவரை போலீசில் சிக்க வைத்தார்.
சென்னை திருவல்லிக்கேணி தேவராஜ முதலி தெருவை சேர்ந்த விஜயன் (28) பெசன்ட் நகரில் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் ஜிம் மாஸ்டராக உள்ளார்.
ஜிம்முக்குச் சென்று கட்டுமஸ்தான் உடம்பை வைத்திருந்தாலும் பெரிய சோம்பேறி. சரியாக வேலைக்குப் போகாமலும், கூடுதல் வருமானத்துக்காக வேறு வேலைக்குப் போகாமல் இருந்து வந்தார்.
இவரது மனைவி பெயர் நித்யா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடைசி குழந்தை தனுஷ்கா 11 மாத கைக் குழந்தையாகும்.
ஜிம் மாஸ்டர் என்ற வகையில் குறைவான வருமான கிடைத்து வந்தது. ஆனால், தனுஷ்கா பிறந்த பின்னர் தான் தனக்கு கஷ்டம் வந்துவிட்டதாக கூறிக் கொண்டு, அந்தக் குழந்தை மீது வெறுப்பைக் காட்டியபடி இருந்துள்ளார். இதனால் விஜயனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துது.
இந் நிலையில் கடந்த 1ம் தேதி மதியம் விஜயன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வாந்தி, பேதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த குழந்தை தனுஷ்கா மலம் கழித்தது.
இதனால் கோபமான விஜயன், கைக் குழந்தையான தனுஷ்காவை கழுத்தை பிடித்து நெரித்து, தூக்கி வீசினார். இதில் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்துபோனது.
இதையடுத்து குழந்தையை கொன்று விட்டீர்களே என்று தாய் சத்தம் போடவே, நான் அடித்ததால் குழந்தை இறந்தது என்று வெளியே சொன்னால், உன்னையும் கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார் விஜயன்.
இதனால் பயந்துபோன நித்யா, கணவர் விஜயன் சொல்படி, வாந்தி, பேதியால் தான் குழந்தை இறந்தது என்று பொய் சொல்லி அக்கம்பக்கத்தினரையும், உறவினர்களையும் நம்ப வைத்தனர்.
குழந்தையின் உடல் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.
இந் நிலையில், கடந்த 11ம் தேதி குடித்துவிட்டு வந்த விஜயன் நித்யாவை அடித்து உதைக்கவே, ஜாம்பஜார் போலீஸ் நிலையம் சென்ற நித்யா, குழந்தை கொலை செய்யப்பட்ட விஷயத்தை கதறியபடியே சொல்லி புகார் தந்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், குழந்தையைக் கொன்றதை விஜயன் ஒப்புக்கொள்ள மறுத்தால் தனுஷ்காவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் குழந்தை கழுத்தை நெறித்து கொலையானது உறுதியானது. இதையடுத்து விஜயன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications