சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்காமல் பழைய புத்தகங்களை கொடுக்கும் பள்ளிகள்
சென்னை: தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வி திட்டத்திலான புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்காமல் பழைய பாடத்திட்டத்திலான புத்தகங்களையே பல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வழங்கியுள்ளதால் மாணவ, மாணவரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அரசு, தனியார் மெட்ரிக் பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்கியுள்ளது.
ஆனால், 20 சதவீத மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வி புத்தகங்களை வாங்காமல் உள்ளன. அவற்றில் பல பள்ளிகள் பழைய மெட்ரிக் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியுள்ளன. இதனால், அந்த மாணவ, மாணவிகள் எந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த சர்ச்சை குறித்து தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குனர் சத்தியகோபால் தெரிவிக்கையில்,
சமச்சீர் கல்விக்காக ஒரு கோடியே 16 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அவற்றில் 81 லட்சம் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. 30 லட்சம் புத்தகங்கள் மெட்ரிக் பள்ளிகள் வாங்கிக் கொள்ள ஒதுக்கப்பட்டது. மொத்தமுள்ள 3,632 மெட்ரிக் பள்ளிகளில் 80 சதவீத பள்ளிகள் சமச்சீர் கல்வி புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிச் சென்றுள்ளன.
ஆனால், 20 சதவீத பள்ளிகள் சமச்சீர் கல்வி புத்தகம் கேட்டு விருப்ப பட்டியல் கொடுக்கவில்லை. ஒருவேளை, அப்பள்ளிகள் அரசு அனுமதி அளித்துள்ள 18 பதிப்பகங்கள் அச்சிட்ட புத்தகங்களை வாங்க திட்டமிட்டு இருக்கலாம். இருப்பினும், சமச்சீர் கல்வி புத்தகம் கேட்டு விண்ணப்பித்தால், தமிழ்நாடு பாடநூல் கழகம் புத்தகங்கள் வழங்க தயாராக உள்ளது என்றார்.