திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
நாகர்கோவில் : செம்மொழி மாநாட்டை ஓட்டு கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் வரும் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. கடந்த வாரம் விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாடு நடைபெறும் கோவை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ரயில் தண்டவாளங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் எஸ்பி ராஜேந்திரன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் லாட்ஜூகளில் தீவிர சோதனையும் நடந்து வருகிறது. சந்தேகப்படும்படி நபர்கள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி லாட்ஜ் உரிமையாளர்களை போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தற்போது துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளிடமும் சோதனை நடத்தப்படுகிறது. செம்மொழி மாநாடு முடியும் வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்று எஸ்பி ராஜேந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications